states

புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனையில் தேஜஸ்வி அம்பலப்படுத்தியதால் பாஜக எரிச்சல்

புதுதில்லி, மார்ச் 6 - பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திங்களன்று புகுந்தனர். இடம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில், உ.பி., பீகார் பாஜக தலைவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை, பீகார் துணைமுதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி சட்டமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தார். இது பாஜக-வுக்கு அவமானகரமாக அமைந்தது. இந்த பின்னணியிலேயே, பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வியின் தந்தை லாலு பிரசாத் மீதான நிலமோசடி குற்றச்சாட்டைக் காரணமாகக் காட்டி, ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்களின் வீடுகளில் ஒன்றிய அரசின் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ஐஆர்சிடிசி ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர்  லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட  16 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு  அக்டோபரில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில், அண்மையில் இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவிக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையிலேயே, சிபிஐ அதிகாரிகள் திங்களன்று சோதனை நடத்தியுள்ளனர். மேலும்,  லாலு பிரசாத் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனை குறித்து, கருத்து தெரிவித்துள்ள லாலு பிரசாத்தின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி, “பாஜகவுடன் இருந்தால், நீங்கள் ராஜா ஹரிச்சந்திராதான். ஆனால், பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு நடக்கும். மகாராஷ்டிரத்தில் சரத்  பவாரின் மருமகன் அஜித் பவார் பாஜகவுக்குச்சென்றார். அவர் மீது அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகுல் ராய், பாஜகவுக்கு  வந்தபோது, அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன.  ஆனால், நீங்கள் பாஜகவின் முகத்திரையை வெளிக் கொண்டு வந்தால் ரெய்டுதான் நடக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.