புதுதில்லி, பிப். 21- அதானி குழுமத்திற்கு இப்போதும் கடன் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ‘பாங்க் ஆப் பரோடா’வின் தலைவர் கூறியுள்ளார். ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை வெளியான பின்னணியில், அதானி நிறுவனங்களுக்கு எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் அளவுக்கு மீறி கடன்களை கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. உலகின் பல்வேறு நிதி நிறுவனங்களும் அதானி குழும பத்திரங்களின் பெயரில் கடன் வழங்க முடியாது என்று அறிவித்து விட்டன. இந்நிலையில்தான், ‘ஹிண்டன்பர்க்’ விவகாரத்திற்குப் பின்னரும் அதானி குழுமத்துக்கு கூடுதலாக கடன்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக ‘பாங்க் ஆப் பரோடா’ (Bank of Baroda) வங்கியின் தலைவர் சஞ்சீவ் சத்தா தெரிவித்துள்ளார். “அதானி குழுமத்துக்கு கூடுதல் கடன் வழங்குவதற்கு, அந்நிறுவனத்திடம் போதிய வருமானமும், சொத்துகளும் இருந்தால் போதும்” எனவும், “கடன் வழங்குவதற்கான தரநிலைகளை சந்தித்தால் அதானிக்கு கூடுதல் கடன் வழங்குவதற்கு தயார்” எனவும் சத்தா கூறியுள்ளார். மேலும், “பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தால் அதானி பங்குகள் சரிந்தது பற்றி தனக்கு கவலை இல்லை” எனவும், “கடன் வழங்குவதற்கான தகுதி அதானி குழுமத்துக்கு இருந்தால் கூடுதல் கடன்கள் வழங்கப்படும்; நல்ல நேரம், கெட்ட நேரம் இரண்டிலுமே ஒரு நிறுவனம் கடனுக்கான தரநிலைகளை கடைப்பிடித்தால் போதும்” என குறிப்பிட்டுள்ளார். மும்பையில் தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்தும் திட்டத்திற்கான ஒப்பந்தம் திட்டம் அதானி குழுமத்துக்கு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு 50.7 பில்லியன் ரூபாய். இந்நிலையில், இத்திட்டத்திற்கு கடன் வழங்கும் விஷயம் தொடர்பாகத்தான் பாங்க் ஆப் பரோடா வங்கியின் தலைவர் சஞ்சீவ் சத்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.