states

img

‘நரேந்திர கவுதம் தாஸ் மோடி’

புதுதில்லி, பிப். 24 - பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக  பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, 3 மணிநேரத்தில் விடு தலை செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலை வர் பவன் கேரா, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காகவே போராடுவதாக தெரிவித்துள்ளார். அதானியின் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி பங்குச் சந்தை ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தினர். எனினும், நரேந்திர மோடி அரசு இப்போது வரை அதானிக்கு எதிராக சிறு துரும்பைக் கூட அசைக்க வில்லை. இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அப்போது, “நரசிம்ம ராவால் ஜேபிசி அமைக்க முடியும். அடல் பிகாரி  வாஜ்பாயாலும் ஜேபிசி அமைக்க முடியும்  என்றால், நரேந்திர ‘கவுதம் தாஸ்’.. ‘மன்னிக்கவும்’ தாமோதர்தாஸ் மோடிக்கு கூட்டுக்குழு அமைப்பதில் என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது பிரதமர் நரேந்திர ‘தாமோதர் தாஸ்’ மோடி, ‘கவுதம் தாஸாக’ (கவுதம் அதானியின் சேவகனாக) இருக்கிறார் என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில், வியாழனன்று இண்டிகோ விமானம் மூலமாக சத்தீஸ்கருக்கு புறப்பட்ட பவன் கேரா-வை, தில்லி விமானநிலை யத்திலேயே தடுத்து கீழே இறக்கிய அசாம் பாஜக அரசின் காவல்துறை, பிரதமர் மோடி  குறித்து அவதூறாகப் பேசியதற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள தாக காட்டி  கைது செய்தனர்.  இந்த சம்பவத்தால் தில்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய டார்மாக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் விமானத்தை விட்டு இறங்கி போராட்டம் நடத்தினர்.  “இச்சம்பவம் ஜனநாயகத்துக்கு விரோத மானது. இந்த அராஜக நடவடிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்’’ என  காங்கிரஸ் கூறியது. பவன் கேராவுடன் சென்ற காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்னரிடே, ‘‘பிரதமரை விமர்சித்த தற்காக கைது என்கின்றனர். இதுதான் பேச்சுரிமையா? வாய் தவறி பிரதமர் மோடியின் பெயரை மாற்றி கூறிவிட்டார். இந்திரா காந்தி குடும்பத்தினர், ஏன் நேரு  பெயரை தங்கள் பெயருடன் சேர்க்க வில்லை என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி னார். ஆனால் அதையே எங்கள் தலை வர்கள் கேள்வி எழுப்பினால் கைதுசெய்கிறார் கள்’’ என்று ஆவேசமாக கூறினார்.

மறுபுறத்தில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான அபி ஷேக் சிங்வி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரச்சூட்டிடம் முறையிட்டார். பிற்பகல் 3 மணிக்கு இந்த முறையீட்டை வைக்குமாறு தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டதையடுத்து இந்த விவகாரம் 3 மணிக்கு முறையிடப்பட்டது. அப்போது மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறுகை யில், பவன் கேரா தவறு செய்துவிட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கோரிவிட்டதாகவும் கூறினார். பவன் கேராவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாலும், நாங்கள்  எப்ஐஆரை ரத்து செய்ய கோரவில்லை. இடைக்கால நிவாரணம் தான் கோரு கிறோம்” என்று வாதிட்டார்.  இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “மனுதாரர் (பவன் கேரா) மன்னிப்பு கோரியிருக்கிறார். நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார். எனவே, பவன் கேரா விற்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை இடைக் கால ஜாமீன் வழங்கப்படுகிறது. தில்லி துவாரகா நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை அளிக்கும்” என்று உத்தரவிட்டார்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் பவன் கேராவிற்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ஒரே இடத்திற்கு மாற்றுவது குறித்து பதிலளிக்குமாறு அசாம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்த டி.ஒய். அனைத்து வழக்குகளையும் ஒன்றாக மாற்றுவது தொடர்பான மனுவை பிப்ரவரி 27-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடவும் ஆணையிட்டார். இந்நிலையில் ஜாமீன் பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த பவன் கேரா, “நாட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டம் எங்களுடையது. அரசியலமைப்பின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம் எங்களுடையது. எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி அச்சமின்றி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அவரின் கரங்களை வலுப்படுத்துவேன். எந்தவித சட்டத்தையும், வழிகாட்டுதலையும் பின்பற்றாமல் தவறான வழியில் என்னை அசாம் காவல்துறையினர் கைது செய்தனர். என்னுடைய கருத்துரிமையை நீதிமன்றம் பாதுகாத்ததன் மூலம் நீதித்துறையின் மீது நான் முழுமையான நம்பிக்கை கொண்டவனாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.