states

img

நடிகை கங்கனாவின் பிதற்றல்!

நடிகை கங்கனா ரணாவத் முன்பு பாஜகவின் ஆதரவாளராக இருந்தார். இப்போது பாஜகவின் உறுப்பினராகி, உடனே வேட்பாளராகவுமாகி விட்டார். பொதுவாக அவரது பேச்சுக்களும் கருத்துக்களும் பதிவுகளும் கொஞ்சம் ‘ஓவராகவே’ இருக்கும். அதீதமான அவரது செயல்பாடுகளுக்கு அவ்வப்போது கடும் பதிலடியும் பெற்றிருக்கிறார். அண்மையில் தமிழ்நாட்டின் ஜக்கிவாசுதேவ், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு தில்லியில் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது, உலகமே இருண்டு போனதாகவும் வாழ்வே தொலைந்து போனதாகவும் பதிவு போட்டிருந்தார். “நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை. நீங்கள் இல்லையெனில் சூரியன் உதிக்காது. பூமி நகராது. இந்த தருணம் உயிரற்ற நிலையில் உறைந்திருக்கிறது” என்று புலம்பியிருந்தார் பாவம். புதனன்று இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பேசும் போது, “பிரதமர் மோடியை நம்மை காக்கும் ராமபிரான் மற்றும் விஷ்ணுவின் ஒரு அங்கம் என்று கூற முடியும்” என்று குறிப்பிட்டதோடு, “முதல் முறையாக பெண்கள் தங்களைப் பற்றி கவலைப்படுவதற்கு ஒருவர் இருக்கிறார் என உணர்கிறார்கள்” என்றும் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

சீட்டு கொடுத்தவரை புகழ்வதில் சிக்கனம் கடைப்பிடிக்காமல் தாராளம் காட்டுவது அவரது நன்றியுணர்வை காட்டுவதாக இருக்கலாம். ஆனால் அதற்காக கொஞ்சமாவது நம்பும்படி பேச வேண்டாமா? ஒரு வேளை இவரைப் பற்றி மோடி கவலைப்பட்டதால் இப்படிக் கூறியிருக்கலாம். ஏனெனில் நாட்டின் எந்தப் பகுதியிலும், ஏன் மோடியின் சொந்த மாநிலத்திலும் கூட பெண்களைப் பற்றி கவலைப்பட்டவர் அல்லர், மோடி! குஜராத் கலவர காலத்திலும், மல்யுத்த வீராங்கனைகள் அபயக்குரல் எழுப்பிய போதும், மணிப்பூர் பழங்குடியினப் பெண்கள் கையறு நிலையில் கதறிய போதும் கூட, மோடியின் 56 அங்குல நெஞ்சம் கொஞ்சம் கூட கவலைப்பட்டதில்லையே! பின் எதை நினைத்து கங்கனா இப்படிப் பேசியிருக்கிறார்? தேர்தல் சுரம் அவரை இப்படி பிணாத்த வைத்து விட்டதுதான் உண்மை! - ப.முருகன்