states

மீண்டும் வெறுப்புப் பேச்சை விதைத்த ‘இந்து தேசியப் பஞ்சாயத்து’ நாட்டின் முதல் இந்து மாவட்டம் தில்லியில் அமையுமாம்

புதுதில்லி, ஏப். 12 - முஸ்லிம்களுக்கு வீடுகளை விற்கவும் கூடாது; வாடகைக்கும் விடக்கூடாது; அவ்வாறு செய்வதன் மூலம் நாட்டின் முதல் இந்து மாவட்டத்தை வடகிழக்கு தில்லியில் அமைப்போம் என்று சங்-பரிவாரங்கள் உறுதிமொழி ஏற்றுள்ளன. தில்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ‘இந்து தேசியப் பஞ்சாயத்து’ என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது. ஜெய்  பகவான் கோயல் தலைமையிலான ‘இந்து ஐக்கிய முன்னணி’ என்ற அமைப்பு இந்த கூட்டத்தை நடத்தியது. பாஜக முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் சத்யநாராயண் ஜட்டியா, வடக்கு தில்லி முன்னாள் மேயர் அவ்தார்சிங் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.  இந்தக் கூட்டத்தில்தான் “தில்லியின் வடகிழக்கு மாவட்டத்தை முழுமையாக இந்துக்கள் கொண்டதாக மாற்ற வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் குடியிருப்புகள் உள்ளிட்ட சொத்துகள் வைத்துள்ள இந்துக்கள் அவற்றை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்யக் கூடாது, வீடுகள் மற்றும் கடைகளை இந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது” என அந்த உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யும்பட்சத்தில், தில்லியின் வடகிழக்கு மாவட்டம் இந்துக்களுக்கான நாட்டின் முதல் மாவட்டமாக மாற்றப்படும் என்று இந்து ஐக்கிய முன்னணியின் தலைவர் ஜெய் பகவான் கோயல் அறிவித்துள்ளார். மேலும் கோயல் பேசுகையில், “தில்லி வடகிழக்கு மாவட்டத்தின் ஒருபகுதியை ‘மினி பாகிஸ்தான்’ ஆக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. இதை முறியடித்து நாட்டின் முதல் இந்துக்களுக்கான மாவட்டமாக இதை நாம் மாற்றுவோம். பிறகு மெல்ல, இந்தியா முழுவதையும் இந்து நாடாக மாற்றுவோம்” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில், அது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதால், கடும் விமர்சனங்கள் எழுந்தன. உடனே, அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக-வினர்  எவரும் கட்சியிடம் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக கலந்துகொண்டதாக பாஜக சமாளித்தது. இதுபோன்ற மதச்சார்புடைய கூட்டங்களை தங்கள் கட்சி அங்கீகரிப்பது இல்லை எனவும் தில்லி பாஜக தலைமை பாசாங்கு காட்டியது. இந்த பின்னணியில், ‘இந்து தேசியப் பஞ்சாயத்து’க்கு முன் அனுமதி பெறவில்லை என தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், கூட்டத்தை நடத்திய ‘இந்து ஐக்கிய முன்னணி’யின் ஜெய் பகவான் கோயல் மற்றும் பாஜக தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.