புதுதில்லி, ஜன.29- பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலாவில் பயணிகள் பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளத்தாக்குப் பகுதியில் கவிழ்ந்ததில் 41 பேர் பலியாயினர். லாஸ்பேலா காவல்துறை உதவி ஆணையர் ஹம்சா அஞ்சும், விபத்து சம்பவத்தை உறுதிப்படுத்தியதோடு, 48 பயணிகளுடன் குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒரு திருப்பத்தில் செல்லும் போது அங்குள்ள பாலத்தின் தூணில் மோதி கவிழ்ந்து தீப்பிடித்தது. அதிக வேகமே விபத்திற்குக் காரணம். இந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றார். விபத்து நடந்த இடத்திலிருந்து ஞாயிறு மாலை ஆறு மணி வரை 17 உடல்கள் மீட்கப்பட்டன. பாகிஸ்தானில் 2011-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 9,000க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் பதிவாகின்றன, சராசரியாக ஆண்டுக்கு 5,000க்கும் அதிகமானோர் பலியாகின்றனர்.