புதுதில்லி, ஏப். 4 - விவசாயத் தொழிலாளர் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் சுனீத் சோப்ரா காலமானார். அவருக்கு வயது 81. ஏப்ரல் 5 (இன்று) தில்லியில் மிகப்பிரம்மாண்டமான தொழிலாளர் - விவசாயிகள் சங்கமம் நடைபெறுகிறது. இதையொட்டி ஏப்ரல் 4 அன்று தில்லியில் உள்ள அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு செல்வதற்காக தோழர் சுனீத் சோப்ரா அவர்கள் குர்கானிலிருந்து தில்லிக்கு மெட்ரோ ரயில் மூலமாக சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியிலேயே ரயிலிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். அப்போதே அவர் உயிர் பிரிந்தது. தோழர் சுனீத் சோப்ராவின் மறைவுச் செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூராய்வு செய்யப்பட்டு பின்னர் ஹரியானாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
தோழர் சுனீத் சோப்ரா, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மூத்த தலைவர் ஆவார். சங்கத்தின் முன்னாள் இணைச் செயலாளரான அவர் தற்போது மத்திய செயற்குழு உறுப்பினராக செயலாற்றி வந்தார். 1991 முதல் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தில் ஓய்வின்றி பணியாற்றியவர் தோழர் சுனீத் சோப்ரா. 2023ல் நடைபெற்ற 10ஆவது தேசிய மாநாட்டில் வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக விடுவிக்கப்பட்டார். நாடு முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கான போராட்டங்களின் முகமாக அறியப்பட்டவர் தோழர் சுனீத் சோப்ரா. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான இயக்கங்களை வழிநடத்தியவர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன்ஸ் ஸ்டடீஸ் நிறுவனத்தில் படித்த போது தோழர் சுனீத் சோப்ராவுக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் அறிமுகமானது. மாணவப் பருவத்திலேயே தீவிரமான கம்யூனிஸ்ட் ஆனார். அங்கு தனது கல்வியை முடித்தவுடன் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராளிகளில் ஒருவராக தன்னை பிணைத்துக் கொள்ளும் விதமாக, பாலஸ்தீன போராளி யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார் தோழர் சுனீத் சோப்ரா. அதன்பின்னர் இந்தியாவுக்கு திரும்பி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிராந்திய வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தில் இணைந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்ததில் சுனீத் சோப்ராவுக்கு முக்கியப் பங்குண்டு. இதைத்தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 1980ல் உருவானபோது அதன் முதல் அகில இந்தியப் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1995ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார். பீப்பிள்ஸ் டெமாக்ரசி உள்பட தேசிய ஏடுகளிலும் பிராந்தியப் பத்திரிகைகளிலும் எண்ணற்றக் கட்டுரைகளைப் படைத்தவர். அகில இந்திய கொரிய நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் செயலாற்றினார். சோசலிச வடகொரியாவின் சாதனைகளை இந்திய மக்களிடையே எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றினார். வடகொரியாவுக்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் சதிகளை அம்பலப்படுத்துவதிலும் முன்னின்றார். தோழர் சுனீத் சோப்ராவின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அவருக்கு செவ்வஞ்சலி செலுத்தியுள்ள அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க த்தின் மத்திய செயற்குழு, தோழர் சுனீத் சோப்ரா வின் மறைவு விவசாயத் தொழிலாளர் இயக்கத் திற்கு மட்டுமின்றி இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயக மற்றும் முற்போக்கு இயக்கங் களுக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளது. சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.விஜய ராகவன், பொதுச் செயலாளர் பி.வெங்கட் ஆகி யோர் தோழர் சுனீத் சோப்ராவின் மறைவு விவ சாயத் தொழிலாளர் சங்கத்திற்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரும் இழப்பு என்று குறிப்பிட்டுள்ளனர். அவரது மறைவுக்கு விவசாயத் தொழி லாளர் சங்க தமிழ்நாடு மாநிலக்குழுவும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெற உள்ள இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சங்க த்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.லாசர், தமிழ்நாடு மாநிலத் தலைவர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ., மாநிலப் பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் விரைந்துள்ளனர்.