states

தாய்நாட்டை மீட்க வாய்ப்பு - ரபேல் கோரியா கருத்து

குயிட்டோ, மே 19- ஈக்குவடார் நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதமான நடவடிக்கை என்றாலும், லஸ்ஸோவைத் தோற்கடிக்கும் வாய்ப்பாகவே இது இருக்கும் என்று அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரபேல் கோரியா கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போதைய ஜனாதிபதி கில்லர்மோ லஸ்ஸோவைப் பதவி நீக்கக் கோரும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. தனது தரப்பையும் லஸ்ஸோ முன்வைத்தார். மொத்தமுள்ள 127 உறுப்பினர்களில் 92 பேர் ஆதரவளித்தால் லஸ்ஸோவின் பதவி பறிக்கப்படும் என்ற நிலை இருந்தது. தனக்கான ஆதரவு குறைவாக இருப்பதால், திடீரென்று நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு புதிய தேர்தல் நடத்தப்போவதாக அவர் அறிவித்தார். நாடாளுமன்றக் கட்டிடத்தைச் சுற்றி ராணுவமும், காவல்துறையினரும் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதுவரையில் ஜனாதிபதி என்ற முறையில் நாடாளுமன்றம் இல்லாமலேயே ஆணைகளை வெளியிட்டு அதன் மூலமாக ஆட்சியை லஸ்ஸோ நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றக் கலைப்பிற்கு முன்னாள் ஜனாதிபதியும், ஈக்குவடாரின் மிகப்பெரிய அரசியல் கட்சியான மக்கள் புரட்சியின் தலைவருமான ரபேல் கோரியா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தேர்தல் நடத்தப்பட்டால் பெரும் ஊழல்களில் திளைத்துள்ள லஸ்ஸோவைத் தோற்கடிக்கும் வாய்ப்பாக அதை மக்கள் எடுத்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.