states

img

கொதி நிலையில் ஹைட்டி

கரீபியன் கடல் பகுதியில் கியூபாவிற்கு கிழக்கே உள்ள ஹைட்டி நாட்டில் 2022 முழுவதும் வெகுஜனக் கிளர்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. 1991 மற்றும் 2004 இல் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதிகளினால் ஏற்பட்ட சமூக நெருக்கடி, 2010, 2016 இல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சூறாவளிப்புயல் பின்னணியில் இந்த கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன. 1915 -34-ல் அமெரிக்கா புகுத்திய நவீன காலனி ஆதிக்க அமைப்பு முறையிலிருந்து வெளிவர கடந்த 100 ஆண்டுகளாக ஹைட்டி  மக்கள் முயன்ற போதெல்லாம் ராணுவ பொருளாதார தலையீடுகள் அடிமை அமைப்பை காப்பாற்றும் வகையில் இருந்து வருகின்றன. நவீன காலனி ஆதிக்கம் மற்றும் சுரண்டல்களால்  ஹைட்டி  மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.  பெரும்பாலான மக்களுக்கு குடிநீர் வசதி, சுகாதார வசதி,கல்வி வசதி, கண்ணியமான வீட்டு வசதி கிடைப்பது அரிதாகிப் போனது.   ஹைட்டியின் 1.14 கோடி மக்களில் 46 லட்சம் பேருக்கு உணவுப் பாதுகாப்பின்மை உள்ளது ;70 சதவிகிதம் பேருக்கு வேலையில்லை.

1986 இல் அமெரிக்க ஆதரவு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற ஜனநாயகத்திற்கான இயக்கத்தில், நவீன காலனி ஆதிக்கத்தை வேரோடு பிடுங்கி எறிவது என்று முதன்முதலாக முழங்கப்பட்டது.இதே உணர்வு இந்த ஆண்டு நடைபெற்று வரும் கிளர்ச்சிகளிலும் எதிரொலிக்கிறது. பொறுப்பு பிரதமர், பொறுப்பு ஜனாதிபதியாக உள்ள ஏரியல் ஹென்றி  எரிபொருள் விலைகளை உயர்த்தினார். இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் கிளர்ச்சிகளை நடத்தின. இயக்கம் தீவிரமடைந்தது. அமெரிக்கா தலைமையிலான ஆறு நாடுகள், ஐரோப்பிய யூனியன், ஐநா மற்றும் அமெரிக்க நாடுகளின் அமைப்பு ஆகியவை கொண்டது (Core Group)   பிரதான மையக்குழு. மக்களின் அதிருப்திகளை சம்பாதித்த முன்னாள் ஜனாதிபதி ஜோவெனெல் மோய்ஸ் படுகொலைக்குப் பிறகு, பிரதான மையக்குழு, ஏரியல் ஹென்றியை 2021ல் ஆட்சியில் அமர்த்தியது . ஆளும் கட்சி, போதைப்பொருள் கடத்தும் கும்பல்கள், கொலம்பிய கூலிப்படைகள், அமெரிக்க உளவு அமைப்புகள் இணைந்து சதி செய்து அவரைப் படுகொலை செய்தனர்.

தற்போது, அமெரிக்காவும், கனடாவும் ஹைட்டியின்  சட்டவிரோத அரசுக்கு முட்டுக் கொடுக்க ராணுவ தலையீடு செய்ய திட்டமிட்டு வருகின்றன . அக்டோபர் 15 இல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு, அமெரிக்கா சமர்ப்பித்த நகல் தீர்மானம், பன்னாட்டு அதிதீவிர தாக்குதல் படை ஹைட்டியில் தலையிட வலியுறுத்துகிறது. ஹைட்டியில் கடந்த இருநூறு ஆண்டுகளாகவே மேற்கத்திய நாடுகள் தங்கள் தலையீடுகள் மூலம் அழிவையே உருவாக்கி வருகின்றன. 1804 ஹைட்டி புரட்சி காலத்தில் இருந்து இரு நூற்றாண்டு காலம் ஏகாதிபத்திய சக்திகள் ஹைட்டியை அடிமைப்படுத்தி, நவீன காலனி ஆதிக்க அமைப்பை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் திணிப்பதை எதிர்த்து, நடைபெற்ற மக்கள் இயக்கங்களை அடக்கி வந்துள்ளன. 2004 முதல் 2017 வரை ஹைட்டியில் நிலைத்தன்மை ஏற்படுத்தும் ஐநா திட்டத்தின் பேரால், ஏகாதிபத்திய சக்திகள் ஹைட்டியில் தலையிட்டன. இதே போன்ற தலையீட்டை இப்போது மனித உரிமையின் பேரால் செய்வது என்பது ஹைட்டி  மக்களுக்கு பேரழிவை உருவாக்கும்.

ஹைட்டியின்  பெரு முதலாளிகள் உருவாக்கிய கலகக்கும்பல், அமெரிக்க ஆயுதங்களுடன் உலா வருகிறது;மக்கள் இயக்கங்களை ஒடுக்குகிறது . ஹைட்டியின் நெருக்கடிக்கு தீர்வு இரண்டு ஆண்டு இடைக்கால அரசு அமைப்பதன் மூலமே சாத்தியம்.