states

ஒரே நிறுவனத்தில் 10 ஆயிரம் வேலை பறிப்பு

லண்டன், மே 22- 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் பத்தாயிரம் பேரை வெளியில் அனுப்பி விடுவோம் என்று பிரிட்டனின் பிடி தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் ஜான்சென் அறிவித்துள்ளார். இது குறித்து ஜான்சென் செய்தியாளர்களிடம் பேசியபோது, “செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பெரும் பலன் பெறுபவர்களில் நாங்களும் ஒருவராக இருப்போம். தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய பல்வேறு பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தப் போகிறோம். இதனால் இந்தப் பிரிவுகளில் பணிபுரியும் 10 ஆயிரம் பேரை வெளியில் அனுப்பி விடலாம்” என்றார். இந்த நடவடிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த 10 ஆயிரம் பேர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் அதே வேளையில், பல்வேறு தொழில்நுட்பங்களை புதிதாக அறிமுகப்படுத்துவதன் மூலம் மொத்தம் 55 ஆயிரம் பணியிடங்கள் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனின் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தின் அறிவிப்பு, மேலும் பல நிறுவனங்களில் இருந்து வரவிருக்கிறது. பிடி தொலைத் தொடர்பு நிறுவனத்தில் மொத்த 1 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 2030க்குள் இந்த எண்ணிக்கையை 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரையில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், இவர்களது வேலைகளைச் செய்து வரும் துணை நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைக்கப் போகிறார்கள்.