states

காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்திடுக : சிபிஎம்

சென்னை,செப்.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஆகாஷ் (வயது 21) என்ற இளை ஞரை, சென்னை, பெரம்பூர், ஓட்டேரி காவல்நிலையத்தைச் சார்ந்த காவலர்கள் விசாரணைக்கு செப்டம்பர் 21 அன்று அழைத்துச் சென்றுள்ளனர். அன்றிரவே ஆகாஷ் சுயநினைவு இழந்து கை, கால்கள் கட்டப்பட்டு ஏகாங்கிபுரம் ஏரிக்கரை ஓரமாக கவலைக்கிடமான நிலையில் கிடந்துள்ள தக வலை ஆகாஷின் பெற்றோருக்கு தெரியப் படுத்தியுள்ளனர். உடனடியாக மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த ஆகாஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29 அன்று  மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக இவரை தாக்கியது மட்டுமின்றி மரண மடையும் நிலையில் கூட அவரை மருத்துவ மனையில் சேர்க்காமல் கை, கால்களை கட்டி ஏரிக்கரையில் வீசிச் சென்றது கொடூ ரத்தின் உச்சமாகும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இக்கொடூரக் கொலையினை வன்மையாக கண்டிப்பதுடன், கொலை வழக்கு பதிவு செய்து, இம்மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், இவரது குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.  தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகி வருவது  காவல்நிலை யத்திற்கு மக்கள் செல்வதற்கே அச்சப்படும் சூழ்நிலை உருவாகிவிடும்.  தமிழக முதல்வரும், காவல்துறை இயக்குநரும் இனி  காவல்நிலைய மரணங்கள் இருக்கக் கூடாது என அறிவுறுத்திய பின்னரும் இத்தகைய மரணங்கள் தொடர்வது இத்துறையில் சிலர் கட்டுப்பாடுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுவது வெளிப்படுகிறது. இது குறித்து அரசும், காவல்துறையும் உரிய ஆய்வுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, காவல்துறை சீர்திருத்தங்களை மக்களும், ஜனநாயக சக்திகளும் வற்புறுத்த முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;