சென்னை, ஏப். 10 - கலாஷேத்ராவில் பாலியல் புகார் கூறிய மாணவர்களை நிர்வாகம் தனித்தனியாக அழைத்து மிரட்டி வருகிறது. இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர். கலாஷேத்ராவில், பாலியல் புகார் தெரிவித்த மாணவர்களை நிர்வாகம் தனித்தனியாக அழைத்து அச்சுறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம், அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. இதனைக் கண்டித்து திங்களன்று (ஏப்.10) கலாஷேத்ரா முன்பு போராட்டம் நடந்தது. பாலியல் புகார் கொடுத்த மாணவர்களை கலாஷேத்ரா நிர்வாகம் மிரட்டுவதை கைவிட வேணடும், ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவினரின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன் ஜாமீனில் வராமல் தடுக்க வேண்டும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டபடி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளை சார்ந்தவர்கள் கலாஷேத்ராவை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை தடுத்துநிறுத்தி காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர்.
காவல்துறை அராஜகத்திற்கு கண்டனம்
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, “பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து மாணவிகள் போராட்டம் துவக்கி 10 நாட்களாகிறது. ஏப். 12ந் தேதியோடு தேர்வுகள் முடிந்து மாணவிகள் வீட்டிற்கு செல்ல உள்ளனர். இருப்பினும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தாமல் உள்ளது. நிர்வாகம் புகார்களை நீர்த்துப்போகச் செய்கிறது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்காமல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்” என்றார். இந்த போராட்டத்தில் மாதர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த், செயலாளர் ரா.பாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் ப.க.புகழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.