states

விருதுநகர் சந்தை: உச்சம் தொட்ட நல்லெண்ணெய் விலை

விருதுநகர், டிச.25- விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய் விலை கடுமையாக  உயர்ந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். விருதுநகர் சந்தையில் ஒவ்வொரு வாரமும் அத்தியாவசிய  உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.  அதில் நல்லெண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. நல்லெண்ணெய் :  விருதுநகரில் பல பிரபலமான நல்லெண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து தமிழகம் முழுவதும் நல்லெண்ணெய் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. மேலும், வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விருதுநகரில் இருந்து நல்லெண்ணெய் ஏற்றுமதியாகிறது. இந்த நிலையில் நல்லெண்ணெய் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த வாரம் 15 கிலோ நல்லெண்ணெய் விலை ரூ.5777 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரே  வாரத்தில் ரூ.165 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.5940க்கு விற்கப்படு கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பலர்அதிர்ச்சியடைந்துள்ளனர். பாமாயில் உயர்வு :

இதேபோல் பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ  ரூ.1500க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.40 உயர்வு ஏற்பட்டு ரூ.1540க்கு விற்கப்படுகிறது. வத்தல் விலை குறைவு : அதேவேளையில் குண்டூர்  வத்தல்  குவிண்டால் ஒன்றுக்கு ரூ.28ஆயிரம் முதல் 29ஆயிரத்து 500 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், வரத்து அதிகரிப்பால் தற்போது ரூ.3ஆயிரம் குறைந்து, ரூ.25ஆயிரம் முதல் 28ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லி சரிவு : சந்தைக்கு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால்  மல்லியின் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் 40 கிலோ லயன் மல்லி விலையானது ரூ.4300முதல் ரூ.4500 வரை விற்பனையான நிலையில் இந்த வாரம் ரூ.200 குறைவு ஏற்பட்டு ரூ.4100 முதல் ரூ.4300 வரை விற்பனையாகிறது.அதேவேளையில் கடந்த வாரம் கடலை புண்ணாக்கின் விலை  குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4600 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.200 அதிகரித்து, 100 கிலோ ரூ.4800க்கு விற்கப்படுகிறது.