states

தலித் பெண் தண்ணீர் குடித்த சின்டெக்ஸை மாட்டு சிறுநீரால் ‘சுத்தம் செய்த’ சாதி வெறியர்கள்!

சாம்ராஜ் நகர், நவ. 21 - கர்நாடக மாநிலத்தில், பொது குடிநீர் தொட்டி குழாயிலிருந்து தலித் பெண்  ஒருவர் தண்ணீர் குடித்ததால், அந்த தொட்டி யிலிருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விட்டு, அந்தத் தொட்டியில் மாட்டின் சிறுநீரை தெளித்து ‘புனிதப் படுத்திய’ கேவலமான சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹக்கோடோரா கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று மணவிழா நிகழ்ச்சிக்காக, மைசூரு அருகே உள்ள சாகுர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். இவர்களில் ஒரு பெண், ஹக்கோடோரா கிராமத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, தாகம் எடுக்கவே, அருகிலுள்ள சின்டெக்ஸ் தொட்டி குழாயிலிருந்து தண்ணீர் குடித்துள்ளார். இதனை அங்கிருந்த லிங்காயத் பிரிவைச் சேர்ந்த சாதிவெறியர் ஒருவர் பார்த்து விட்டார். ஒரு தலித் எப்படி, பொதுக்குழாயில் தண்ணீர் அருந்தலாம் என்று கேட்டு, அந்த நபர்  தலித் பெண்ணை கடுமையாக திட்டி அவ மானப்படுத்தியுள்ளார். தலித் மக்களையே சிலரை அழைத்து, அந்த பெண்ணை கண்டிக்கச் செய்துள்ளார். அவமானம் தாளாத அந்த தலித் பெண் பேருந்து வந்ததும் வேகவேகமாக அதில் ஏறி, அந்த கிராமத்தை விட்டு நகர்ந்துள்ளார். இதனிடையே அங்கு கூடிய சாதி வெறியர்கள், பிரச்சனையை அத்துடன் விடாமல், தலித் பெண் பயன்படுத்திய சின்டெக்ஸில் இருந்த தண்ணீர் அனை த்தையும் வெளியேற்றியுள்ளனர். பின்னர்  மாட்டுச் சிறுநீரை எடுத்து வந்து அந்த தொட்டியில் ஊற்றிக் கழுவியுள்ளனர்.

இந்த சம்பவத்தை யாரோ சிலர் வீடி யோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட நிலையில், ஹக்கோடோரா கிராமத்தில் அரங்கேறிய சாதிவெறிக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில், இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் தங்களுக்கு வர வில்லை என மாவட்ட நிர்வாகம் கூறி யது. ஆனால் சாம்ராஜ்நகர் புறநகர் காவல்  நிலையத்தில் கிரியப்பா என்பவர் புகார்  ஒன்றை அளித்திருப்பதாக உறுதிப்படுத்தப் படாத மற்றொரு தகவல் வெளியானது. இதனிடையே, பிரச்சனை தீவிர மாகாமல் தடுக்க,  ஹெக்கோதாரா கிரா மத்தில் அனைத்து சாதியினரும் கலந்து கொண்ட சமரசக் கூட்டத்தை சாம்ராஜ் நகர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதில்,  சாதியைக் காரணம் காட்டி, கோவில் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டாலோ, பொது உரிமைகள் பெறப்படுவது தடுக்கப் பட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அத்துடன், தலித் மக்கள் தண்ணீர் குடிப்பதற்கு தடுக்கப் பட்ட அதே சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங் களில் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது என கர்நாடக அமைச்சர் சோமண்ணா உறுதியளித்துள்ளார்.