states

மோடி அரசுக்கு கண்டனம்!

புதுதில்லி, ஜூலை 21 - முக்கியத் தலைவர்களைக் குறி வைத்து விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலம்  அரசியல் எதிரிகளுக்கு எதிராக இடை விடாத பழிவாங்கும் போக்கை மோடி அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பதாக 12 எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. ‘நேசனல் ஹெரால்டு’ பத்திரிகை தொடர்புடைய ‘அசோசியேட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளை ‘யங் இந்தியா’ நிறு வனத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட் டோருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.  ஏற்கெனவே, ராகுல் காந்தியை நேரில் வரவழைத்து பல நாட்கள் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று (ஜூலை 21) சோனியா காந்தியையும் நேரில் வரவழைத்து 3 மணி  நேரம்  வரை விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ள அனைத்து எதிர்க்கட்சி களின் தலைவர்கள் கூட்டம், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லி கார்ஜூன கார்கேவின் அலு வலகத்தில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜம்மு -காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, மதிமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய 12 எதிர்க்கட்சிகளின் தலை வர்கள் கையெழுத்திட்ட கூட்ட றிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.  இந்த அறிக்கையில், “வரலாறு காணாத வகையில் பல அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். மோடி அரசு தனது அரசியல் எதிரிகள்  மற்றும் விமர்சகர்களுக்கு எதிராக இடைவிடாத பழிவாங்கும் பிரச்சாரத்தை புலனாய்வு அமைப்பு களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பல அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் வேண்டுமென்றே குறி வைக்கப்பட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் துன்புறுத்தப் படுகின்றனர். இதனைக் கண்டித்தும், நமது சமூகக் கட்டமைப்பை அழிக்கும் மோடி அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, அரசியலமைப்பு விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் எங்கள் கூட்டுப் போராட்டத்தைத் தொடரவும் தீவிரப்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ்

முன்னதாக, நாடாளுமன்ற மக்களவையில் காங். எம்.பி மாணிக்கம் தாகூர் அமலாக்கத்துறை துஷ்பிர யோகம் செய்யப்படுவது குறித்து விவாதிக்க  வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட் டீஸை வழங்கினார். அதேபோல கவுரவ்  கோகோவும், ஒன்றிய அரசால் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை துஷ்பிர யோகம் செய்யப்படுவதாகவும் இதுகுறித்து  விவாதிக்க வேண்டும் எனவும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கினார். கே.சி. வேணுகோபால், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய்  சிங் ஆகியோரும் நோட்டீஸ் அளித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர் போராட்டத்தை முன்னெ டுத்தனர். மக்களவையில் அமளியில் ஈடு பட்ட காங்கிரஸ் எம்.பிக்களை பார்த்து  ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “சட்டத்  தின் முன் எல்லோரும் சமமா இல்லையா?” என கேள்வி எழுப்பினார். மேலும், “சோனியா காந்தி என்ன சூப்பர் மனிதரா? அவர் சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என நினைக்கின்றீர்களா?” என்றும் கேள்வி யெழுப்பினார். இதனால் நாடாளுமன்ற அவையில் கூச்சல் குழப்பம் மேலும் அதிக மானது. 

சோனியா காந்தியிடம் பகல் 12.30 மணி  அளவில் அமலாக்கத்துறை தனது விசா ரணை தொடங்கிய நிலையில், அமலாக்கத்  துறையைக் கண்டித்து வியாழனன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். தலைநகர் தில்லியி லும் காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட பலர் போராட்டம் நடத்தி கைதாகினர். இதனிடையே, ஜூலை 25-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.