states

பெண்கள், உழைக்கும் மக்களை ஏமாற்றிய ஒன்றிய பட்ஜெட்

புதுதில்லி, பிப்.3- ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள 2023-24 பட்ஜெட், பெண்களையும் உழைக்கும் மக்க ளையும் ஏமாற்றும்  பட்ஜெட்டாகும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சாடியுள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் சமத்துவமின்மை ஆழமான முறையில் அதிகரித்துள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2022 உலக சமத்துவமின்மை அறிக்கையின் படி, இந்தியாவில் உள்ள உயர்ந்த நிலையில்  உள்ள 1 விழுக்காட்டினர், அதாவது பாஜக-வின்  கூட்டுக்களவாணி முதலாளிகள் நாட்டின் செல்வ வளத்தில் 40 விழுக்காட்டை பெற்றிருக்கின்ற அதே சமயத்தில், அடித்தட்டில் உள்ள 50 விழுக்காட்டு மக்களோ வெறும் 3 விழுக்காடு அளவிற்கே பெற்று, உயிர்வாழ்வதற்கே தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர். பெண் களும், அவர்களுடைய குடும்பத்தினரும் வேலையின்மையால் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆனால் பட்ஜெட் இத்தகைய எதார்த்த நிலைமைகளை கண்டுகொள்ளவே இல்லை.

பட்ஜெட்டை உன்னிப்பாக ஆராயும்போது பல்வேறு அரசின் செலவினங்கள் வெட்டப் பட்டுள்ளதைக் காண முடிகிறது. மோடியும், நிதியமைச்சரும் பெண்கள் ஆதரவு பட்ஜெட் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதன் விவரங்களைப் பார்க்கும்போது அவை அதற்கு  நேரெதிராக இருக்கின்றன. மொத்த பட்ஜெட்டில் பாலினத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு சென்ற  ஆண்டு 0.71 விழுக்காடு இருந்தது, இப்போது  0.73 விழுக்காடாகும் எனக் குறிப்பிடப்பட்டிருக் கிறது. ஆனால், இருக்கின்ற பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு இதன் உண்மை மதிப்பை  ஆராய்வோமானால், இந்த ஒதுக்கீடு சென்ற ஆண்டைக் காட்டிலும் 3 விழுக்காடு  குறைவாகும். இதேபோன்ற பல செலவினங் களும் பெயரளவில் அதிகரிக்கப்பட்டிருக் கின்றன. மேலும் அவ்வாறு ஒதுக்கப்படும் தொகைகளும் மாநிலங்களுக்கு உரிய முறை யில் அனுப்பப்படுவதில்லை. இதனைத்தான் 2022ஆம் ஆண்டில் நாம் பார்த்தோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் தொடர்பான அமைச்சகத்திற்கு, மொத்த பட்ஜெட் தொகையில் வெறும் 0.05 விழுக்காடே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் 80 விழுக்காடு அங்கன்வாடி ஊட்டச்சத்து திட்டத்திற்குச் சென்றுவிடும்.  பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான திட்டங்களுக்கு மிகவும் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் விளையாட்டுக்கு என்று எந்த ஷரத்தும் இல்லை. சமீப காலங்களில் இவர்களின் பாது காப்பு என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.  

கடன்வலையில் சிக்கிய  பெண்களுக்கு உதவாத பட்ஜெட்

பட்ஜெட்டில் பெண்களின் சேமிப்பு குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தாலும், இவற்றில் பெரும்பகுதி பெண்களை தனியார் வசம் தள்ளிவிடும் போக்கு இருப்பதைக் காண முடிகிறது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மஹிலா சம்மன் சேமிப்பு பத்திரா என்னும் திட்டத்தின் மூலம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலராலேயே சேமிப்புகளைச் செய்திட முடியும். இவ்வாறு அரசாங்கத்தால் அறிவிக்கப் பட்டுள்ள திட்டங்கள் கடன் வலையில் சிக்கிக்கொண்டுள்ள பெரும்பான்மையான பெண்களுக்கு எவ்விதத்திலும் உதவாது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான செலவினங்கள் 33 விழுக்காடு வெட்டப்பட்டிருப்பதானது, பெண்கள் மீது நேரடியான தாக்குதலைத் தொடுத்திடும். இதேபோன்றே விதவை களுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கும்  தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்களுக்கும் பட்ஜெட் ஒதுக்கீடு கடுமை யாக வெட்டிச் சுருக்கப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கான ஒதுக்கீடுகளும் மிகவும் குறைவு. இன்றுள்ள பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது, இந்தத் தொகையின் உண்மையான மதிப்பில் பார்த்தோமானால் மிகவும் மோசமான அளவில் தொகை வெட்டப்பட்டிருக்கிறது. கல்விக்கான செலவினமும் வெட்டப் பட்டிருப்பது, பெண் கல்வி மீது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்றே சுகாதாரத் திட்டங்களுக்கும் செலவினங்கள் பெயரளவில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.  இவ்வாறு இந்த அரசாங்கம் சமூக நலத் திட்டங்களில் கடும் வெட்டினை ஏற்படுத்தி இருக்கிறது.

போராட்டத்திற்கு அறைகூவல்

இந்தப் பட்ஜெட்டானது, பெண்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைக் காவு கொடுத்து,  பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளித்தந்துள்ளது. எனவே இந்த பட்ஜெட்டி ற்கு எதிராக மாதர் சங்கத்தின் அனைத்துக் கிளைகளும், ஜனநாயக சக்திகளும் போர்க்குரல் எழுப்ப வேண்டும் என்றும், அரசாங்கத்தின் மோசடிகளைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றும் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)