states

img

நூல் சிறிது; செய்தி பெரிது

சிஐடியு பிரச்சார பயணத்தில் பங்கேற்க மே 21, 2023 காலை 8  மணிக்கு திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்  இறங்கிய போது என் கைகளில் இந்த சிறு நூலை தோழர் இளங்கோவன் தந்தார்.  எந்நேரமும் எதையாவது வாசிப்பதும், தேடுவதும், பகிர்வதுமாக இருக்கிற தலைவர் அவர். வயது ஒரு தடையாக இல்லாமல் இயங்கும் அவரது களப் பணியும், எழுத்துப் பணியும் சிறந்த முன்னுதாரணம்.  நடைபயணத்தில் பங்கேற்று விட்டு திரும்பும் போது, வண்ணாரப்பேட்டை மெட்ரோவில் இருந்து நங்கநல்லூர் மெட்ரோ  வரை (சென்ட்ரல் மெட்ரோவில் இறங்கி பச்சை வழித் தடம் மாறி) வருகிற போது ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட்டேன்.  7 முனைகளில் இருந்து திருச்சி நோக்கி  நடைபயணம் மேற்கொண்டு வரும் பிரச்சாரக் குழுவினருக்கு ஒரு அற்புதமான குறிப்புகளை கொண்ட ஆவணம். சிஐடியு  மாநிலக் குழு பொருத்தமான நேரத்தில் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் அவர்களின் ரத்தினச் சுருக்க முன்னுரை யோடு வெளியிட்டுள்ளது.  காங்கிரஸ் ஆட்சியிலும் தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்டு வர முயற்சி இருந்தாலும் அவர்கள் நிறைவேற்ற வில்லை. வாஜ்பாய், மோடி காலங்களில் தான் எதிர்ப்பையும் புறந்தள்ளி கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை கால வரிசைப்படி விளக்கியுள்ளார். காலகாலமாக போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கிற திருத்தங் கள் எப்படி நாடாளுமன்றத்தில் விரிவான விவாதமே இல்லாமல் நிறைவேற்றப் பட்டுள்ளன என்பதையும் அறிமுகப் பகுதி பேசுகிறது. 

29 சட்டங்கள் எப்படி நான்கு தொகுப்பு களாக மாற்றப்பட்டுள்ளது என்பதை தொகுப்பு வாரியான தகவல்களுடன் தந்துள்ளார்.  குறிப்பான சட்டங்கள் தொழிலாளர் பயன்கள், உரிமைகள் மீது ஏற்படுத்தும் கவனக் குவிவை எப்படி தொகுப்புச் சட்டங்கள் சீரழிக்கும் என்பதை விவரித்துள்ளார். சமூகப் பாதுகாப்பு தொகுப்புச் சட்டம் 2020 இல்-மகப்பேறு பயன் சட்டம் 1967, சினிமா தொழிலாளர் நல நிதி சட்டம் 1987, அமைப்பு சாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு சட்டம் 2008, கட்டட, கட்டுமான தொழிலாளர் மேல்வரிச் சட்டம் 1966 உள்ளிட்ட 9 சட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள், பிரச்சி னைகள் தொழிலைப் பொறுத்து, பாலினம் சார்ந்து மாறுபடக் கூடியவை. ஆனால் ஒரே தொகுப்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம் ஆழ்கவனம் அடி வாங்குகிறது.  அது போல பணிப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு  சட்டம் 2020 இல்-உழைக்கும் பத்திரிகை யாளர் ஊதிய நிர்ணய சட்டம் 1958, ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒழித்தல் சட்டம் 1970, மாநிலங்களுக்கு இடையேயான புலம் பெயர் தொழிலாளர் ஒழுங்குபடுத்தல் மற்றும் பணி நிலைமை கள் சட்டம் 1979 ஆகியன இணைக்கப் பட்டுள்ளன. கூர் கவனம் செலுத்தப்பட வேண்டிய தனித் தன்மை கொண்ட தொழி லாளர்களின் பிரச்சினைகள் மொத்தத் தொகுப்பாக மாறும் போது நீர்த்துப் போகாதா? சட்டத்தின் பெயர்களே பிரச்சினை களையும், அவலங்களையும்,  உரிமைகளை யும், கடமைகளையும், அப்பயன்கள் கடந்து வந்த வரலாற்றையும் நினைவுபடுத்து மல்லவா? தொகுப்புச் சட்டங்கள் இப்படிப் பட்ட நினைவுகளை திருத்தி எழுதி அழிக்கின்றன. 

முதலாளிகளுக்கு “இலகுவாக தொழில் நடத்தும் சூழலை” (Ease of doing business) உறுதி செய்ய விரும்புகிற அர சாங்கம் “மகிழ்வான பணிச் சூழலை” ( Ease of doing labour) உருவாக்குகின்றனவா? என்ற கேள்வியை வலுவான தரவுகளுடன் எழுப்புகிறார்.  ஒரு புறம் முதலாளிகளுக்கு லே ஆப், பணி நீக்கம், அமர்த்தவும் துரத்தவுமான சுதந்திரம், நிலையாணை முறை நீர்ப்பு, விதி விலக்குகள் என்ற பெயரால் விதிகளை செய லிழக்க செய்தல் ஆகிய ஆயுதங்களை பரிசாக வழங்குகிறது.  100 தொழிலாளிகளுக்கு கீழ் இருந்தால் லே ஆப் கட்டுப்பாடுகள்,  நிலை யாணை முறையில் இருந்து கிடைத்த  விலக்கு, இப்போது 300 தொழிலாளிகளுக்கு கீழ் இருக்கிற நிறுவனங்களுக்கு தரப்படு கிறது. பணி நீக்க விதிகள்,  முறையான விசா ரணை, இடை நீக்க கால பயன், விடுமுறை, ஷிஃப்ட், தாமத வருகை ஆகியவற்றை எல்லாம் கேள்விக்குள்ளாக்கும் அளவற்ற சுதந்திரத்தை முதலாளிகளுக்கு தந்துள்ளது.  மறுபுறம், வேலை நிறுத்த உரிமையை அநேகமாக இல்லாமல் ஆக்குதல், வேலை  நிறுத்தத்தை உடைப்பவர்களுக்கு பாதுகாப்பு ஆகியவற்றை தொகுப்புகள் கொண்டு வரு கின்றன. 

சூப்பர்வைசர் என்று பெயர் மட்டும்  கொடுத்து விட்டால் அவர்கள் தொழில் உறவு சட்டங்களுக்குள் வர மாட்டார்கள். அத்தக் கூலிகள் போல சம்பளம் வாங்குபவர்களைக் கூட டை கட்டி, எக்சிகியூட்டிவ் என்ற பெயரில் நிறுவனங்கள் வலம் வர வைப்பதற்கான கார ணம் இதுதான். கல்யாணப் பத்திரிக்கையில் போடுவதற்கு வேண்டுமானால் மாப்பிள்ளை கெத்துக்கு உதவலாம். கல்வி  நிறுவனங்கள் வராது. தொண்டு நிறுவனங்கள் வராது. இதுவரை பூசாரிகள் கூட வேலை நிறுத்தம் செய்யலாம். இனி முடியாது... தெய்வ குத்தம் அல்ல. சட்ட குற்றம்.  1920 பின்னி மில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சக்கரை செட்டியாருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்த காட்சியை நம் மனக் கண் முன் கொண்டு வருகிறார்.  சட்டங்கள் உரிமைகளை தரவில்லை, உரிமைகளுக்கான போராட்டங்களே சட்டங் களை பிரசவித்தன என்பதை அழகாக நிறுவி உள்ளார். 

இது தவிர ஊதியத் தொகுப்பின் அபாயங்கள், காண்ட்ராக்ட் முறைமை இறுகு தல், குறித்த கால காண்ட்ராக்ட் முறைமை (Fixed term employment) ஆகியன பற்றி  எல்லாம் பேசுகிறார். எப்படி நிரந்தர வேலை கள் லட்சக் கணக்கில் பொதுத் துறைகளில் பறிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை தருகிறார்.  46000 காண்ட்ராக்ட் அடிப்படையிலான “அக்னி வீர்” இராணுவ வேலைகளுக்கு 54  லட்சம் பேர் விண்ணப்பித்ததை சுட்டிக் காட்டு கிறார்.  தொழிற் சங்க இயக்கம் எதிர்கால தலை முறையின் “கௌரவமான வேலை” கோரிக்கையை முன்னெடுக்க வேண்டு மென்ற கடமையை அவர் எழுத்து முன்னி றுத்துகிறது. அருமையான சிறு நூல். பெரிய எழுத்துகளில் 32 பக்கம். ஒரு நிமிடத்தில் ஒரு பக்கத்தை கடந்து விடலாம். “ஊதி யம்” பற்றி விளக்குகிற பக்கங்கள் வேண்டு மானால் இரண்டு நிமிடங்கள் எடுக்கலாம்.  தொழிற்சங்க தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் தவறாது வாசிக்க வேண்டிய நூல்.

“தொழிலாளர் 
தொகுப்புச் சட்டங்களை 
ஏன் எதிர்க்கிறோம்?”
ஆசிரியர் - 
ஆர்.இளங்கோவன், டிஆர்இயு. 
வெளியீடு: சிஐடியு, தமிழ்நாடு மாநிலக்குழு, 27, மசூதித் தெரு, சேப்பாக்கம், சென்னை-600005 பக்கங்கள் : 32 - விலை : ரூ.15/-