மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 25- 20 சதவீத மின்கட்டண உயர்வு என்ற ஒன்றிய பாஜக அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே மின்கட்டண உயர்வுக்கான திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாடு முழுவதும் தொழிற்சாலை, வணிகம், மற்றும் வீடுகளின் பயன்பாட்டி ற்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது, தற்போது மின்சாரம் அதிக மாக பயன்படும் உச்சபட்ச நேரங் களில் மின்கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப் படும் என ஒன்றிய பாஜக அரசு அறி வித்துள்ளது. அதாவது உச்ச நேரமாக காலை 6 மணி முதல் 10 மணி வரையும், இரவு 6 மணி முதல் 10 மணி வரையும் இந்த கட்டண உயர்வு இருக்கும். இதற்காக மின்சார விதி 8 இல் 8ஏ என்ற புதிய திருத்தத்தை கொண்டு வந்து 14.06.2023 அன்று உத்தரவிட்டுள்ளது. அதாவது, மேற்கண்டவாறு மின்சார விதிகளில் கொண்டு வந்துள்ள திருத்தத்தின்படி, 2024 ஏப்ரல் மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கும், 2025 ஏப்ரல் மாதம் முதல் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று சொல்லப் படுகிறது. உச்சபட்ச நேரத்திற்கு ஒரு வகையான மின்சார கட்டணம், சாதா ரண நேரத்திற்கு ஒரு வகையான மின்சார கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல. இதனால், சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இந்தியாவின் தற்போதைய மின் நிறுவுதிறன் 2023 ஜனவரியில் 411.64 ஜிகா வாட்-ஆக உள்ள நிலையில், இந்தி யாவின் உச்சபட்ச தேவை என்பது 2022 டிசம்பரில் 205.03 ஜிகா வாட் ஆகத்தான் இருந்தது. அதாவது, மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதம் மட்டுமே உச்சபட்ச தேவையாக உள்ளது. எஞ்சிய மின் உற்பத்தியை பயன்படுத்த தேவை இல்லாத நிலையில், உச்சபட்ச நேரத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே எழவில்லை.
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் கட்டண உயர்வு
மேலும், பல்வேறு விதமான பணி களுக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், இளை ஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு பொதுமக்களும் பொதுவாக காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். எனவே, காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பயன்பாடு என்பதும் அதிகமாக இருக்கும். சாதா ரண, ஏழை, எளிய பொதுமக்கள் அதிக மாக பயன்படுத்தும் நேரத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்திவிட்டு, அவர்கள் பயன்படுத்தாத நேரத்தில் மின்சார கட்ட ணத்தை குறைக்கிறோம் என்பது மக்க ளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டி ருக்கும் நிலையில், எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் இந்த கட்டண உயர்வு அனைத்துத்தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும். இந்த திருத்தத்தால் வீட்டு மின்நுகர் வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் அறிவித்தி ருந்தாலும், மேற்கண்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை, தமிழ்நாடு அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். எனவே, ஒன்றிய அரசு உச்சபட்ட நேரத்தில் அறிவித்துள்ள 20 சதவீத கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், மின்சார விதிகளில் செய்யப்பட்டுள்ள 8ஏ திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.