அந்நாளைய முன்னணி எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி (1901 - 1960) புலனாய்வுப் புதினமெழுதிய தமிழின் முதல் பெண் எழுத்தாளராவார். புதினம் மட்டுமல்லாமல் கவிஞராகவும் இதழாசிரியராகவும் இருந்த கோதைநாயகி ஒரு சிறந்த மேடைப்பேச்சாளர். சமூகநல ஊழியர். இவை மட்டுமல்லாமல் அவர் ஒரு விடுதலைப்போராட்ட வீரருமாவார். அவரது சமகாலத்து இலக்கியவாதிகள் அவரை நாவல் ராணி என்று புகழ்ந்தார்கள். கதாமோகினி என்றும் அவரை அழைத்தார்கள் அப்போது. 115 புதினங்களுக்கும்மேல் இவர் எழுதியிருக்கிறார். 59 ஆண்டுகள் வாழ்ந்த கோதைநாயகி 35 ஆண்டுகள் எழுத்தையே தவமென்று வாழ்ந்தார். 1937 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 சில்வர் ஸ்கிரீன் இதழில் கோதைநாயகியின் நாவல்கள் பற்றியொரு விளம்பரம் வந்திருக்கிறது. அதில் விநோதம் என்னவென்றால் அவரது புதினங்களின் பட்டியலில் இடையிடையே சிலவற்றின் பெயருக்கு அருகில் நட்சத்திரக் குறி இடப்பட்டிருந்தது. அதற்கான விளக்கமும் அதே விளம்பரத்தில் இருந்ததாம். அந்த விளக்கம் இதுதான்: ‘இக் குறியிட்டுள்ள நாவல்கள் உயர்ந்த நீதிகளுடனும், சிறந்த கதைப் போக்குடையவையாகவும், படம் தயாரிக்க மிகவும் ரஸமாகவும் இருக்கின்றன!’ கோதைநாயகியின் பல நாவல்கள் திரைப்படங்களாகத் தயாரிக்க ஏற்றவையாக உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டபோதிலும், அவரது எத்தனை கதைகள் படங்களாயின என்பதற்கான கணக்கு ஏதும் கிடைக்கப்பெறவில்லைதான். அந்தப் பட்டியலிலிருந்த ராஜமோகன் (1937), அனாதைப்பெண் (1938) போன்ற ஒன்றிரண்டு கதைகள் திரைப்படங்களாகி இருக்கின்றன என்றும் தெரிகிறது. கோதை நாயகி திரைப்பட மாநாடு ஒன்றில் பங்கேற்று உரை நிகழ்த்தியிருக்கிறார். அவர் அன்றைக்குப் பேசிய அந்த உரையில் இடம்பெற்றிருந்த கருத்துக்களில் பலவும் இன்றைக்கும் பொருந்துவதாக நமக்கெல்லாம் வியப்பளிக்கின்றன. அவற்றில் சில இங்கே: “தற்காலப் பொதுமக்கள் விரும்புவதாவது அறிவையும், சமூக சீர்திருத்தங்களையும், நல்ல படிப்பினைகளையும் புகட்டக்கூடிய உயரிய கதைகள் - சரித்திரங்களையும், மனதைக் கவரத்தக்க விதமான நடிப்பையும்தான். பாட்டுக்கே படத்தில் பிரதானம் கொடுக்கும் மனோபாவம் இன்னும் சில முதலாளிகளுக்கு மாறவில்லை.
மேல்நாட்டுப் படங்களை நாம் பார்க்கிறோம். மருந்துக்குக்கூட பாட்டுக்களே இல்லாமல் எத்தனையோ வெற்றியாயும் சாரத்துடனும் அமைந்திருப்பதை நாமே அனுபவிக்கிறோம். தமிழ்ப்படங்களில் அசம்பாவிதமான இடங்களில் பாட்டுக்கள்... மோட்டாரை ஒரு பெண்மணி தானே ஓட்டிக்கொண்டு போகும்போது பாடுவது... ஓர் உத்தமியான பெண்ணை காமுகன் பலாத்காரம் செய்யும்போது பாட்டு... கத்தியை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும்போது பாட்டு... தன்னைத்தானே அலங்காரம் செய்துகொள்ளும்போது பாட்டு... குடித்தவனும் பாடுவது... வெறி பிடித்தவனும் பாடுவது... ரயில் பாதையில் சண்டையிடும்போது பாட்டு... மிகவும் ரசமானதும் உணர்ச்சியைக் கிளப்பக் கூடியதுமான இடத்தில் உயர்ந்த சம்பாஷணையுடன் ஆச்சர்யமான நடிப்பினால் பரவசமுறச் செய்வதை விட்டு, பார்ப்பவர்களுக்கு வெறுப்பைக் கிளறிவிடுவதற்கு அங்கோர் பாட்டு.. அப்பப்பா, பாட்டைக் கண்டாலே பிடிக்காத நிலைமையைத் தமிழ் பேசும் படங்கள் செய்துவிட்டன!” இவை 85 ஆண்டுகளுக்கு முன்பு வை.மு.கோதைநாயகி பேசியவை. இன்றும் பொருந்துகின்றன என்றால் சினிமாவின் உள்ளடக்கத்தில் என்னதான் மாற்றங்கள் வந்துவிட்டன, பெரிதாக?