மதுரை, ஏப். 28- கரூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் கண்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகரைச் சேர்ந்தவர் செல்டன். இவர் கரூரில் உள்ள ஜவுளி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி, மதுரை பொன்னகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் செடோரா(8). தாய் பணிபுரிந்துவரும் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி விடு முறையை முன்னிட்டு தந்தையைப் பார்க்க செடோரா கரூருக்குச் சென்றார். அங்கு புதன்கிழமை தந்தையு டன் கடை வீதிக்குச்சென்றபோது கார் ஒன்று, இருசக்கர வாகனத்தில் மோதியதில் செடோரா பலத்த காயமடைந்து கரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலு தவிக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை மாட்டுத் தாவணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி செடோரா வியாழனன்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் செடோரா உயிரிழந்தாலும் அவரது இரு கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்,இதையடுத்து சிறுமி செடோராவின் கண்கள் அகற்றப்பட்டு தானமாக வழங்கப்பட்டன.