சென்னை, மார்ச் 11- தமிழ்நாடு காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதையடுத்து பொன் விழா காணும் தமிழ்நாடு பெண் காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1973 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் முதல்முறையாக பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அன்றைக்கு முதல் பெண் காவல் உதவி ஆய்வாளராக உஷாராணி பொறுப்பேற்றார். அவருடன் ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் என மொத்தம் 22 பெண்கள் மட்டுமே பணியில் களமிறங்கினார்கள். இதன் பின்னர், படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாடு காவல் துறைக்கு பெண்களின் பங்களிப்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் 1976 ஆம் ஆண்டு 2 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்வானார்கள். இவர்களில் ஒருவர் திலகவதி, இன்னொருவர் லத்திகாசரண். இருவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்.இன்றைக்கு, முத்திரை பதிக்கும் வகையில் ஒரு டி.ஜி.பி., 2 கூடுதல் டி.ஜி.பி.க்கள், 14 ஐ.ஜி.க்கள் உள்பட 23,542 பெண் காவலர்கள் பணியில் உள்ளனர். பின்னர் 1992 ஆம் ஆண்டில் மகளிர் காவல் நிலையம் தனியாக தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 202 அனைத்து பெண் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பெண் போலீஸ் கமாண்டோ படையை, விரைவு அதிரடிப்படையும் உருவாக்கப்பட்டது. தற்போது பொன் விழா காணும் தமிழ்நாடு மகளிர் காவலர்களை கவுரவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவிக்க உள்ளார். இதற்கான விழா வருகிற 16 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.