சென்னை, செப்.29- போலி பத்திரப் பதிவு ஒழிப்பு சட்டத்தை வைகோ வரவேற்றுள்ளார். இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும், நிலம் மற்றும் சொத்துகளை மோசடியாக பத்திரப்பதிவு செய்து வருவது தொடர்ந்து கொண்டிருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி போலி ஆவணம், ஆள் மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவுத்துறையே ரத்து செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்ட முன்வரைவுக்கு கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. நில அபகரிப்பு செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளர்களால் புகார் மனு பெறப்படும் பட்சத்தில், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து, பதிவு செய்யப்பட்ட பத்திரம் போலியானது என்று கண்டறிந்தால், அதை ரத்து செய்ய மாவட்டப் பதிவாள ருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. போலிப் பத்திரப் பதிவால் பாதிக்கப்பட்டவர்களின் பதிவு ரத்து செய்யப்பட்ட தற்கான ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உரிமையாளர்களிடம் வழங்கியிருப்பதை வரவேற்கி றேன். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.