சென்னை,ஏப்.30- தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 10 ஆம் வகுப்பு களுக்கு மே 6 ஆம் தேதியிலும், 11 ஆம் வகுப்பு களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளன. கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு இந்த வருடம் முழுமையாக நடத்த பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். தேர்வு மையங்கள், பறக்கும் படைகள் கண்காணிப்புகள் குறித்து கையேடு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பறக்கும் படையினர் செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி அந்த கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கூடத்திற்கு மாணவர்கள் எவ்வாறு வர வேண்டும், விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் செல்போனை தேர்வு மைத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. மேலும் ஷூ, பெல்ட் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணிந்து வந்தால் கூட தேர்வு அறைக்கு வெளியே கழற்றி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதக் கூடிய மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் சிலர் துண்டு சீட்டு வைத்து காப்பி அடிப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.