states

ஈரோடு தொகுதியில் சாதி - இனவெறியைத் தூண்டும் சீமான்

ஈரோடு, பிப். 16 - ஈரோடு கிழக்குத் தொகுதியில், வாக்குகளைப் பெறுவதற்காக, ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பா ளர் சீமான் சாதிவெறியைத் தூண்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சீமான் மீது பட்டியல் - பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில், 35 சதவிகிதம் அளவிற்கு இருப்பதாக கூறப்படும் ஒரு சமூகப் பிரிவினரின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக, பகிரங்க மாகவே சாதிய அம்சத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  அண்மையில், ஈரோடு கிழக்கு தொகுதி பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், “விஜயநகர பேரரசு வந்தபிறகு முதலியார்களைக் கூப்பிட்டு உங்கள் மன்னர்களுக்கு பட்டாடை நெய்து கொடுத்ததைப் போல எங்களுக்கும் நெய்து கொடுங்கள் என்று உத்தரவிட்டார்கள். ஆனால், முதலியார்களோ வேற ஆளைப் பாருடா.. என்று கூறி விட்டார்கள். விஜயநகர மன்னர்கள் வேறு வழியில்லாமல் குஜராத்தில் இருந்து சௌராஷ்டிராக்களை இறக்கி னார்கள்.

அதேபோல இந்த நிலத்தில் என் ஆதித் தமிழ்  குடிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களிடமும், விஜயநகர மன்னர்கள் சென்று எங்கள் ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற  ஆளை பாரு! என்று ஆதித் தமிழ்குடிகளும் கூறிவிட்டார் கள். வேறு வழியில்லாமல் ஆதிக்குடிகளை கொண்டு வந்து  இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததி யர்கள்” என்று மொழி அடிப்படையிலான இனவெறியை யும் தூண்டி விட்டார். சீமானின் இந்த சாதிய - இனவாத பேச்சுக்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படியும், தேர்தல் விதிமுறைகளின் படியும் நடவடிக்கைக்கு உரியதாகும். ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி யளித்துள்ள ‘தமிழ்ப்புலிகள்’ கட்சியை சேர்ந்த முத்துக்குமார்,

“அருந்ததிய மக்கள் வந்தேறிகள் என்பதை சீமான் நேரடியாக சொல்லி இருக்கிறார். சீமானிடம் அதற்கு  ஆதாரம் இருக்கிறதா? எந்த புத்தகத்தில் படித்தேன் என்பதை சொல்வாரா? சொல்லவே மாட்டார். ஏனென்றால் சீமான் பேசுவதற்கு ஆதாரமே இருக்காது” என்று கொந்தளித்துள்ளார். “வாய்க்கு வந்ததை உளறுவதே சீமானின் வேலை.  ஓட்டுக்காக ஒரு சமூக மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை செய்பவர்தான் சீமான். குறிப்பிட்ட பட்டியல் வகுப்பினரை உயர்ந்தவர்கள் என்று சொல்லி, இந்துத்துவா, பாஜக அரசியலுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் வேலையைத்தான் முதலியார்கள் சமூகத்தினர் மத்தியிலும் அவர் செய்கிறார். தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது. அவர்கள் அடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கொடுத்த அஜெண்டாவை செய்து வருகிறார் சீமான்” என்றும் கடுமையாக சாடியுள்ளார்.