மதுரை, மே 11- இந்திய ரயில்வே துறை பயணச்சீட்டு அச்சிடும் அச்சகங்களை மூடுவதென முடிவெடுத்துள்ளது. பயணச்சீட்டு அச்சிடுவதை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்போவதாகக் கூறி அப்பணியை அவுட்சோர்சிங் முறைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. சென்னை-ராயபுரம் (தெற்கு ரயில்வே); செகந்திராபாத் (தென் மத்திய ரயில்வே); மும்பை-பைகுல்லா (மத்திய ரயில்வே); ஹவுரா (கிழக்கு ரயில்வே); தில்லி சகுர்பஸ்தி (வடக்கு ரயில்வே) ஆகிய இடங்களில் பயணச்சீட்டு அச்சடிக்கும் நிலையங்கள் உள்ளன. சமீபத்தில் அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அச்சகங்களை மூடுவதற்கு தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அச்சகங்கள் மூடப்படுவதைத் தொடர்ந்து அங்குள்ள இடம் “நல்ல நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும்” என்று கூறப்பட்டாலும், ரயில்வே தனது தேவைக்காக நிலங்களைப் பயன்படுத்துமா அல்லது அவற்றை திறந்த சந்தையில் விற்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐந்து நகரங்களிலும் உள்ள அச்சகங்கள் முக்கியப் பகுதிகளில் அமைந்துள்ளன என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பயணச்சீட்டு அச்சிடும் அச்சகங்கள் மூடப்பட்டவுடன், பயணிகள் முன்பதிவு, (PRS) மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் (UTS) டிக்கெட்டுகள், சிறப்பு அனுமதிச்சீட்டு உள்ளிட்ட பணிகள் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட அச்சகங்களுக்கு அவுட்சோர்சிங் விடப்படும் என கூறப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்து அச்சகங்களை மூட ரயில்வே முதலில் முடிவு செய்திருந்தது. பயன்படுத்த முடியாத அச்சு இயந்திரங்கள் உள்ளிட்ட மற்ற இயந்திரங்களை ‘ஸ்கிராப்பாக’ மாற்றி (குப்பையாக மாற்றி) அவற்றை அப்புறப்படுத்த அங்கீகாரம் அளித்திருந்தது. ஆனால் ரயில்வே அச்சகங்களை மூடுவதற்கு ரயில்வே ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். “பல்வேறு அமைச்சகங்களின் கீழ் செயல்படும் அச்சகங்களை மூடுவது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு. டிக்கெட்டுகள் உள்ளிட்ட எந்தப் பிரிவையும் அவுட்சோர்சிங் செய்யக்கூடாது” என்கின்றனர். இயந்திரங்கள் நவீனமயமாக்கல் காரணமாக ராயபுரத்தில் உள்ள அச்சகத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 600-லிருந்து வெறும் 35 ஆகக் குறைந்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறவில்லை. பணியாளர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து காலியாக உள்ள பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில் நிறுவப்பட்ட ராயபுரம் அச்சகம் சமீபத்தில் ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு நவீனமயமாக்கப்பட்டது, மேலும் ஊழியர்களும் அந்த நாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள். இது குறித்து வியாழனன்று நமது செய்தியாளரிடம் பேசிய டிஆர்இயு மதுரைக் கோட்டச் செயலாளர் சங்கரநாராயணன், “ரயில்வேக்கு சொந்தமான அச்சகங்களை மூடுவது கண்டனத்திற்கு உரியது. அச்சகங்களை மூடக்கூடாது என டிஆர்இயு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சென்னை ராயபுரத்தில் உள்ள அச்சகத்திற்கு நவீன அச்சு இயந்திரம் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டது. இதை இயக்குவதற்கென சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ரயில்வே பயணச்சீட்டுகளை அச்சடிப்பதால் நஷ்டம் ஒன்றும் இல்லை. ஒருவேளை ஒன்றிய அரசு நஷ்டம் எனக் கருதினால், லாபகரமாக இயக்குவதற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசின் பாடநூல்களை அச்சடித்துக்கொடுக்கலாம். தமிழக அரசை நாடிச் சென்று பல்வேறு அச்சுப்பணிகளைப் பெறலாம். ஒன்றிய அரசின் பிறதுறைகளுக்குத் தேவைப்படுவனவற்றை அச்சிட்டுக்கொடுக்கலாம்” என்றார்.