states

மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் துவங்கியது

காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

 ரூ.1000 உதவித்தொகை  பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, சுயமரியாதையுடன் சமூகத்தில் பெண்கள் வாழ உதவியாக இருக்கும்”

காஞ்சிபுரம், செப்.15-  1 கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவியர்க்கு,  மாதந்தோறும் ரூ. 1000 வங்கிக் கணக்கில் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  திட்டத்தை, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான வெள்ளியன்று (செப்.15) முதல்வர்  மு.க.  ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். முன்னதாக அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னார்.  பின்னர் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி  மைதானத்தில் நடந்த விழாவில் 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டையை வழங்கி கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை துவக்கிவைத்தார் ஸ்டாலின். அப்போது  பேசிய முதல்வர் “ஆட்சிக்கு வந்ததுமே கொடுத்திருப்போம். ஆனால், நிதி  நிலைமை சரியாக இல்லை. அதனால்தான், நிதி  நிலையை ஓரளவுக்கு சரிசெய்துவிட்டு, இப்போது  கொடுக்கிறோம் என்று இந்த திட்டம் இரண்டாண்டு தாமதமானதற்கு  விளக்கத்தை அளித்தார்.  தொடர்ந்து அவர் பேசியதாவது; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை  தொடங்கி வைக்கும் நான் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த மகளிர் உரிமைத்  தொகையைப் பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள். இந்த இரண்டரை ஆண்டுகளில் எத்தனை பயனுள்ள திட்டங்கள், ‘விடியல் பயணத் திட்டம்,’ பள்ளிக் குழந்தைகளுக்கு ‘காலை உணவுத் திட்டம்,’ உயர்கல்வி கற்க  வரும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம்,’ ‘நான் முதல்வன்  திட்டம்,’ இந்த திட்டங்களை எல்லாம் தொடங்கிய  போது எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அடைந் தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சி யில் நான் இருக்கிறேன்.    

இது திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதி. ரொம்ப முக்கியமான வாக்குறுதி. இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டனர். இவர்களால் தரமுடியாது என்று பொய் பரப்புரையையே தங்களுடைய உயிர் மூச்சாக வைத்து வாழும்  சிலர் கூறினார்கள். ஆனால், இந்த விழா காஞ்சிபுரம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில், நகரங்களில் நடந்துகொண்டு வருகிறது. என்னைப் போலவே, அமைச்சர்களும் பல்வேறு மாவட்டங்களில் சென்று விழாவில் கலந்துகொண்டுள்ளனர். நான் போட்ட ஒரு கையெழுத்து பலரது வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்ற உரிமையை எனக்கு கொடுத்தவர்களே மக்கள்தான். தமிழக மக்களாகிய நீங்கள், உதய சூரியன்  சின்னத்தையும், எங்களது கூட்டணி கட்சியினரை யும் ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வாக்களித்ததால்தான், இன்று முதல்வர் பொறுப்பில் அமர்ந்து, உங்களுக்குத் தேவை யானதை செய்து கொண்டிருக்கிறேன். மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். மக்களுக்காகத்தான் பயன்படுத்துவேன். நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்த திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல், வாழ்நாள் முழுவதும் உழைக்கக்கூடிய பெண்களின் உழைப்புக்கு கொடுக்கக்கூடிய அங்கீகாரம். இந்தாண்டுக்கு 12000 ரூபாய், உரிமைத் தொகை கிடைக்கப்போகிறது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, சுயமரியாதையுடன் சமூகத்தில் பெண்கள் வாழ உதவியாக இருக்கும்” இவ்வாறு  முதல்வர் கூறினார்.

கையேடு 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஒரு கையேடு வழங்கப்பட்டது. அதில் மகளிர் உரிமைத் தொகையை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி.  எந்தெந்த சேமிப்புத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம். ஏடிஎம் பின் முதலி யனவற்றை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருந்தன.  திட்டம் தொடங்கப்படும் நாளன்று அனைத்து வங்கிக் கணக்குக்கும் ஒரே நேரத்தில் தொகையை விடுவித்தால் தொழில்நுட்ப சிக்கல்  ஏற்படக்கூடும் என்பதால், அதை தவிர்க்கும் விதமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங் களிலும் குறிப்பிட்ட அளவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வியாழனன்றே (செப்.14) ரூ.1,000 உரிமை தொகை விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து நிதி விடுவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.