சேலம்: முகநூல் மூலம் பழகி, வங்கியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, இளைஞரிடம், 1.52 லட்சம் ரூபாய் மோசடி செய்த சென்னை ஆசாமி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த சதீஷ், முகநூலில் சென்னையை சேர்ந்த ஒருவருடன் நண்பரானார். அப்போது சதீஷ் வேலை தேடி வருவதாகக் கூறியுள்ளார். அதற்கு அவர், வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி வருவதாகவும், மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரியுடன் பழக்கம் உள்ளதால், ஏற்காட்டில் உள்ள ஒரு வங்கியில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதனை நம்பிய சதீஷ், கூகுள்-பே மூலம், 1.52 லட்சம் ரூபாயை அனுப்பிள்ளார். பணத்தை பெற்ற அவர், ஓராண்டாகியும் வேலை வாங்கி தரவில்லை. இதனையடுத்து, சேலம் இரும்பாலை காவல்துறையிடம் சதீஷ் புகார் கொடுத்துள்ளார். முகநூல் ஐ.டி., மூலம் நடத்திய விசாரணையில், அவர், சென்னை, திருமுல்லைவாயிலை சேர்ந்த சிவக்குமார் என தெரிந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.