states

முகம்மது ஆரிப்பின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

புதுதில்லி, நவ. 3 -  தில்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில், தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் பயங்கரவாதி முகம்மது ஆரிப் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் அவரது தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. கடந்த 2000 டிசம்பர் 22-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தில்லி செங்கோட்டைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கு பாதுகாப்புக்காக நின்ற ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 7-ஆவது ராஜ்புதானா ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 பேர்; பொதுமக்களில் ஒருவர் என 3 பேர் கொல்லப்பட்டனர். லஷ்கர் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.  

இந்த சம்பவம் தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியும், பாகிஸ்தானைச் சேர்ந்தவருமான முகம்மது ஆரிப் என்ற அஷா பாக் உள்ளிட்ட 6 பயங்கரவாதிகள் உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்களில், முகம்மது ஆரிப், டிசம்பர் 25, 2000-இல் கைது செய்யப்பட்டார். தில்லி கீழமை நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. அதன் முடிவில், அவர் அக்டோபர் 24, 2005 அன்று குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 31, 2005 அன்று முகம்மது ஆரிப்பிற்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தூக்குத் தண்டனையை செப்டம்பர் 13, 2007ஆம் ஆண்டு தில்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து முகம்மது ஆரிப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், கடந்த 2011, ஆகஸ்ட் 10-ஆம் அந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு அடுத்தபடியாக அவரது சீராய்வு மனுவையும் 2011 ஆகஸ்ட் 28 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனினும், தூக்குத் தண்டனை வழக்கில் தொடரப்படும் மறுசீராய்வு மனுக்கள் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதை அடுத்து, முகம்மது ஆரிப்பின் மறுசீராய்வு மனுக்களை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள 2016-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.

முன்னதாக, 2014 ஏப்ரல் 28 அன்று ஆரிப்பின் தூக்குத் தண்டனைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையிலேயே, இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ‘தன்னை குற்றவாளியாக கருதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவும் தண்டனையை எதிர்த்தும்’ முகம்மது ஆரிப் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.  “மின்னணு பதிவுகளை ஆதாரமாக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இருப்பினும், முழு விவகாரத்தை கருத்தில் கொண்டாலும் ஆரிப்பின் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். மறுசீராய்வு மனுவை ரத்து செய்கிறோம்” என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.