சென்னை, நவ. 18- உணவு பாதுகாப்புத்துறை உரிமத்தை ஆயுள் உரிமமாக மாற்றக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட வணிகவரித்துறை அலுவலகத்திலும் வரும் 29ஆம் தேதி மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல இடங்க ளில் உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக பேரமைப்புக்கு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இந்த சட்டத்தை முறைப் படுத்தி, அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், ஒன்றிய அரசு உணவு பாதுகாப்புத் துறை உரிமத்தை ஆயுள் உரிமமாக மாற்ற வேண்டும். வேளாண் விளைபொருள் கொள்முதலில் இ-நாம் முறையை ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்தும் முறையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இது மொத்த கொள்முதல் செய்யும் வணிகர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, கார்ப்பரேட் வணிகத்தை மட்டுமே ஊக்குவிக்கும் நடைமுறையாக இருக்கும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு இ-நாம் முறையை கைவிடவேண்டும். தற்போது அரசு அறிவித்துள்ள உச்சநேர மின் பயன்பாட்டுக் கட்டணம் 10 விழுக்காடு குறைக்கப்பட்டிருப் பதை பேரமைப்பு வரவேற்கிறது. ஆனாலும் முழுமையாக பயன்பாட்டுக் கட்டணம் சாதாரண கட்டணமாகவே அறிவிக்க வேண்டும். மின்கட்டண அளவீடு மாதாந்திர அடிப்படையில் எடுக்க வேண்டும். சொத்துவரி உயர்வு காரணமாக குடிநீர் கட்டணமும், கழிவுநீர் கட்டணமும் அதிகளவு உயர்ந்துள்ளதால், இந்த வரி உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட வணிகவரித்துறை அலுவலகத்தில் வரும் 29ஆம் தேதி மனு அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.