states

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு கோரி பொதுமக்கள் முற்றுகை

அரியலூர், ஏப். 3 - கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி நான்கு வழிச்சாலை பணி நடக்கும் இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தை அடுத்த சின்ன வளையம் கிராமத்தில் திருச்சி - சிதம்பரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக, பொது மக்களிடம் இருந்து நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கையகப் படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி, நிலத்தை கொடுத்த விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஞாயிறன்று சாலை பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் சம்பவ இடத்திற்கு வந்து, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் நிலம் கொடுத்தவர்களை, ஏப்.7 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.