states

விருதுநகர் சந்தை துவரை, உளுந்தம் பருப்பு விலை உயர்வு

விருதுநகர், மார்ச் 5- விருதுநகர் சந்தையில் துவரம்பருப்பு, உருட்டு உளுந்தம் பருப்பின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால், இல்லத்தரசிகள் மற்றும் உணவு விடுதி உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: வத்தல் நாடு (புதுஸ் )விலையானது கடந்த வாரம் ரூ.16  ஆயிரம் முதல் 19 ஆயிரம் விற்பனையாகி வந்தநிலையில், சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் 1000 ரூபாய் குறைந்து தற்போது ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை யாகிறது. துவரம் பருப்பு ( நயம் புதுஸ் லையன்) விலையானது கடந்த வாரம் ஒரு குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 100 என விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது,  மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு, ரூ.11 ஆயிரத்து 200 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு ( நாடு எப்.ஏ.க்யூ) விலை யானது கடந்த வாரம் குவிண்டால் ஒன்று ரூ.8200 என்ற விலைக்கு  விற்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ரூ.300 உயர்ந்து தற்போது ரூ.8500க்கு விற்பனையாகிறது. துவரம் பருப்பு மற்றும் உருட்டு உளுந்தம் பருப்பின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீடுகளில் இட்லி,  தோசை, சாம்பார் போன்ற உணவுப் பொருட்களை தயார்  செய்திட கூடுதல் செலவு ஏற்படும் எனவும், இதனால், மாத பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தி வருபவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது எனவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், குறைந்த விலைக்கு இட்லி, தோசை, வடை ஆகியவற்றை தயார் செய்து பொது மக்களுக்கு வழங்கி வருகிறோம். இதுபோன்ற விலை உயர்வால் அவற்றின் விலையை வேறு வழியின்றி நாங்களும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் உணவு விடுதி நடத்தும் உரிமை யாளர்கள் கூறுகின்றனர். பாசிப் பருப்பு விலை குறைவு : கடந்த வாரம் 100 கிலோ பாசிப் பருப்பின் விலை ரூ.10ஆயிரம் என்ற நிலையில், மூட்டை ஒன்றுக்கு ரூ.200 குறைந்து தற்போது ரூ.9800க்கு விற்கப்படுகிறது. பாசிப் பயறு ( இந்தியா நாடு வகை)  கடந்த வாரம் 100 கிலோ ரூ.7800க்கு விற்கப்பட்டு வத்ந நிலையில், தற்போது ரூ.200 குறைந்து, ரூ.7600க்கு விற்கப்படுகிறது. புண்ணாக்கு விலை உயர்வு :  புண்ணாக்கின் விலையை எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களே தீர்மானித்து வரு கின்றன. அந்த வகையில் கடந்த வாரம் 100 கிலோ கடலை  புண்ணாக்கு ரூ.5300-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த வாரம் திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.5800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் 50 கிலோ எள் புண்ணாக்கு ரூ.2400க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த வாரம் ரூ.50 உயர்த்தப் பட்டு ரூ.2450க்கு விற்கப்படுகிறது. இதன்காரணமாக, ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆடு, மாடுகளுக்கு முக்கியத் தீவனமாக புண்ணாக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விலை உயர்வால், பால், இறைச்சி ஆகியவற்றின் விலையும் உயரும் அபாயம்ஏற்பட்டுள்ளது.