பாரிஸ், ஜூன் 13- சீர்திருத்தம் என்ற பெயரில் ஓய்வூதியத்தையே மறுக்கும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஆணை மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பிரான்சில் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதையும், அதற்கான பணிக்காலத்தையும் உயர்த்த ஜனாதிபதி மானுவல் மக்ரோன் தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதற்குக் கடுமையான எதிர்ப்பு மக்கள் மத்தியில் கிளம்பியது. நாடு முழுவதும் அனைத்துத் தரப்பினர் பங்கேற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுத் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதுவரையில் 12 நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த ஓய்வூதியத் திட்டத்தை வாக்கெடுப்புக்கு விட்டால் தோல்வியடைந்து விடுவோம் என்பதால் ஜனாதிபதி ஆணை வழியாக அதை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளனர். இந்த ஆணை மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இடதுசாரி எம்.பிக்கள் முயற்சித்தனர். ஆனால், நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்த ஆணையை விவாதிக்கவோ அல்லது அதன் மீது வாக்கெடுப்பு நடத்தவோ அனுமதிக்க முடியாது என்று அரசு கூறிவிட்டது. அதோடு போராட்டங்களை ரப்பர் குண்டுகள் மூலமாக எதிர்கொள்ள வலதுசாரி அரசு ஆணையிட்டிருக்கிறது. ரப்பர் குண்டு ஜனநாயகம் என்று விமர்சனம் செய்யும் அளவுக்கு பிரான்ஸ் அரசின் செயல்பாடுகள் மோசமாக மாறியுள்ளன.