states

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த புதிய சட்டம்

சென்னை, ஜன.23- தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த ஏதுவாக 1914-ம் ஆண்டு சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  இந்நிலையில், இது தொடர்பான வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், 1914-ம் ஆண்டு சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும், இதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதிய சட்டத்தை இறுதி செய்ய அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். அதுவரை தற்போதைய நிர்வாகிகளே பதவிகளில் நீடிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டனர்.