சிபிஎம் விமர்சனம்
தென்காசி, ஜுன் 28 - பொது சிவில் சட்டத்தைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு சிறுபான்மை மக்களின் அனைத்து உரிமைகளையும் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விமர்சித்தார். பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக பேசியிருப்பதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த கே.பாலகிருஷ்ணன், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியப்பிரதேசத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று கூறியுள் ளார். மதச்சார்பற்ற கட்சிகள், பொது சிவில் சட்டம் கொண்டுவருவதை சிறு பான்மை மக்களின் வாக்குவங்கியை மனதிற்கொண்டே எதிர்ப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். ஆனால் உண்மை யில் மோடியின் நோக்கம், 2024 தேர்தல் நெருங்குவதையொட்டி இப்பிரச்சனையை கிளப்பி விடுவதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்துக்களின் வாக்கு வங்கிகளை திரட்ட முடியும் என்ற நோக்கத்தோடுதான்.
அனைத்து மதங்களுக்கும் பொதுவான சட்டம் கொண்டுவர முனைப்புக் காட்டும் ஆர்எஸ்எஸ் - பாஜக, இந்து மதத்தில் உள்ள சாதிய வேற்றுமைகளை களைவதற்கு தயாராக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே பொது சிவில் சட்டம் தொடர்பாக ஆலோசிக்க அமைக்கப் பட்ட சட்ட ஆணையம், 2018 ஆம் ஆண்டில், “ஒரே சிவில் சட்டம் என்பது அவசியமும் அல்ல; இந்த கட்டத்தில் விரும்பத்தக்கதும் அல்ல” என்ற முடிவுக்கு வந்தது. இந்தக் கருத்து சரி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆமோதித்து ஏற்றுக் கொள்கிறது. சீரான தன்மையை (Uniformity) சமமான தன்மையுடன் (Equality) ஒப்பிட முடியாது. அனைத்து சமூகத்திலும் உள்ள பெண்களுக்கும் சம உரிமைகள் வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இதனை பல்வேறு சமூகங்களிலும் உள்ள ஆண்களையும் பெண்களையும் ஜனநாயகப் பூர்வமாக பங்கேற்க வைத்து, தற்போது அமலில் உள்ள அவரவர் மதங்களுக்கான பிரத்யேக தனிநபர் சட்டங்கள் மற்றும் வழக்கமான சட்டங்களில் பொருத்தமான சீர்திருத்தங்களை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. எனவே பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் பற்றி பேசுவது முற்றிலும் தேர்தல் ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட தாகும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் உ.முத்து பாண்டியன், சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.