சென்னை, ஏப்.1 - தமிழ்நாட்டில் மேலும் 13 மாவட்டங்களில் தலா ஒரு மாதிரிப் பள்ளிகள் அமைக்க வரும் நிதியாண்டில் ரூ.250 கோடி ஒதுக்கப் படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளியன்று (மார்ச் 31 ) பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. பிறகு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழ்நாட்டில் 2,996 அரசு நடுநிலைப் பள்ளிகள், 540 உயர் நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ரூ.175 கோடியில் அமைக்கப்படும்”என்றார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகளை உருவாக்கும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக வரும் கல்வியாண்டில் 7,500 பள்ளிகளில் ரூ.150 கோடியில் அமைக்கப்படும். மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேலும் ஊக்கப்படுத்த மாபெரும் வாசிப்பு இயக்கம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்கேற்க ஏதுவாக விளையாட்டு பயிற்சிகள் எளிதில் கிடைக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் ரூ.9 கோடியில் துவங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.