கோவை, மார்ச் 9- 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கோவையை சேர்ந்த பெண் கேரளா அரசின் திட்டத்தால் மீட்கப்பட்டுள்ளார். கோவை - சோமனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (62). இவரது மனைவி ருக்குமணி (50). ருக்குமணியின் தங்கை உமாதேவி (40). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். செல்வராஜ் குடும்பத்தார் இவரை பாதுகாத்து பராமரித்து வந்துள்ளனர். இதனிடையே உமாதேவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டார். குடும்பத்தார் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில், கேரள அரசு வீடற்று சாலையில் சுற்றுபவர்களை மீட்டு, அவரது குடும்பத்தாரிடம் சேர்க்கும் திட்டத்தை தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காந்திபவன் அறக்கட்டளை நிர்வாகிகள் கேரளா மாநிலம், கொல்லம் அருகே இரண்டு மாதங்களுக்கு முன்பு உமாதேவியை மீட்டுள்ளனர். இதையடுத்து அறக்கட்டளை செயலாளர் புனலூர் சோமராஜன் ஏற்பாட்டின் பேரில் அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் உமாதேவி அவரது உறவினர்களை பற்றி தெரிவித்தார். இதனையடுத்து, கோவை - கருமத்தம்பட்டி போலீசாரை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். கருமத்தம்பட்டி போலீ சாரின் முயற்சியால் உமாதேவியின் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டு அறக்கட்டளை நிர்வாகி களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வியாழனன்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் உமாதேவியை அவரது குடும்பத்தாரிடம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில், எனது மாமியர் இறப்பதற்கு முன்னால் உமாதேவியை பார்த்துக் கொள்ளு மாறு கேட்டுக்கொண்டார். இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை பராமரித்து வருகிறோம். இந்நிலையில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்துள்ளார். அவர் கிடைக்க முயற்சி மேற்கொண்ட கேரள அரசுக்கும், அனைவருக்கும் நன்றி என்றார். உமாதேவி தனது குடும்பத்தாரை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் காணாமல் போனவர் குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.