states

கடும் எதிர்ப்புகளையும் மீறி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துகிறது மம்தா அரசு‌

கொல்கத்தா, ஜுன் 6- போராட்டக்காரர்களின் எதிர்ப்பையும் மீறி வரும் கல்வியாண்டு முதல் ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப் போவதாக மேற்குவங்க அரசு முடிவெடுத்துள்ளது‌. அரசின் முடிவை மக்களுக்கு தெரிவிக்க கையெழுத்து இடப்படாத செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த குறிப்பில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான குழுவின் பரிந்துரை எதையும் அரசு வெளியிடவில்லை. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து விடும்; எனவே இக்கல்விக் கொள்கையை மேற்குவங்க அரசு அமல்படுத்தக் கூடாது என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மனு ஸ்மிருதி மற்றும் புராண கட்டுக்கதைகளை வரலாறாக திரித்துக் கூறி ஆர்எஸ்எஸ்-சின் கருத்துகளை மாணவர்களிடம் புதிய கல்விக் கொள்கை கொண்டு செல்கிறது.

மேலும் இக்கல்விக் கொள்கை அதிகளவில் மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழிவகுக்கிறது. இத்தகைய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் திரிணாமுல் காங்கிரசும் ஒன்றிய பாஜக அரசும் ஓர் உடன்பாட்டோடு செயல்பட்டு வருகின்றன என இந்திய மாணவர் சங்கத்தின் மேற்கு வங்க மாநில செயலாளர் ஶ்ரீஜன் விமர்சித்துள்ளார். துவக்கத்தில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை திரிணாமுல் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது என  எதிர்ப்பு தெரிவித்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழுக்கள் அமைத்தாலும் அக்குழுக்களின் அறிக்கையை மேற்கு வங்க அரசு வெளியிடவில்லை. கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என யாரையும் அரசாங்கம் கலந்தாலோசிக்காமல் திடீரென இந்த கல்வியாண்டு முதல் இளநிலைக் கல்வி நான்கு ஆண்டுகள் என கையெழுத்திடாமல் ஓர் அறிக்கையை அரசு வெளியிட்டு உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்களின் கட்டமைப்பு என்பது மிக மோசமாக உள்ளது.போதிய ஆசிரியர்கள், ஆய்வுக்கூடங்கள் என எதுவும் முறையாக இல்லை. புதிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வி நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டு கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்படும்‌. இச்செயல் ஏற்கனவே பொருளாதார சிக்கலில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்களை  முழுவதுமாக கல்வியில் இருந்து விலக்கி வைத்துவிடும் என மேற்குவங்க கல்வியாளரும் கல்வி உரிமை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளருமான இஷிதா முகர்ஜி தெரிவித்துள்ளார்.