தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் நாடு முழு வதும் 101 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலத்திற்கான அறிவிப்பை மார்ச் 29 ஆம் தேதி வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டில் தஞ்சா வூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடசேரி, அரிய லூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சேத்தியாதோப்பு ஆகிய மூன்று மையங்கள் இந்த 101க்குள் அடக்கம். இந்த மூன்று மையங்களுமே நன்கு வளமான நெல் விளையும் பகுதியாகும். இத னால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது இயல் பான ஒன்றே! இந்த நிலையில் சனிக்கிழமையன்று (8.4. 2023) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக ஊடகங்களில், “தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலக்கரி ஏலம் ரத்து செய்யப்பட்டதாக” செய்தி வெளியிடப்பட்டது. நிலக்கரி துறை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தனது டிவிட்டர் பதிவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டதற்கு இணங்கியும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கு மதிப்ப ளித்தும், தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டும், ஏலத்திலிருந்து தவிர்க்குமாறு அறிவியுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைக்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட வில்லை. தற்போதைக்கு தமிழ்நாட்டில் மேற் கண்ட மூன்று பகுதிகளையும் ஏலம் விடுவதை தடை செய்ய அறிவுறுத்தியுள்ளார். இதை தங்களுக்கு கிடைத்த வெற்றி என அரசும், பல்வேறு அரசி யல் கட்சிகளும், அமைப்புகளும் சொந்தம் கொண் டாடி வருகின்றன. பாஜக தலைவர் அண்ணாம லை, தமிழ்நாட்டு விவசாயிகள் நலனிற்கு முக்கி யத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் பிரதமர் நரேந்திரமோடி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏலத்திற்கான அறிவிப்பு வந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர், மிகக் கடுமையாக எதிர்ப்பை தெரி வித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். மாநில அர சாங்கத்தை கலந்தாலோசிக்காமல் இதுபோன்ற திட்டத்தை அறிவித்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று சட்டம் நடைமுறையில் இருந்து வருவதை குறிப்பிட்டும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பிரதமரிடமிருந்து முதலமைச்சரின் கடிதத்திற்கு எந்த பதிலும் இல்லை. ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய நிலக்கரி அமைச்சகம். அந்த அமைச்சகத்திலிருந்து ஏலம் ரத்து செய்யப்பட்டதாக எந்தவித அறிவிப்பும் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மத்திய அமைச்சர் டிவிட் செய்துள்ளார். டிவிட்டர் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்து விட்டாலே ஏலம் ரத்தாகிவிடுமா? அது சட்டப்படி யானதா என்றால், இல்லை என்ற முடிவுக்கே வர முடியும். யார் செய்தியை முந்தித் தருவது என்ற ஊட கங்களுக்கிடையிலான போட்டா போட்டியில் ஏலத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக செய்தி போடுகின்றனர். அண்ணாமலை வெளியிட்ட இந்த செய்தி எந்த அளவிற்கு நம்பகமானது என்பது சந்தேகத்திற்குரியதே? ஏனென்றால், உத்தரவு நகல் எதுவும் எவரிடமும் இல்லை.
மத்திய அமைச்சர் 6ம் தேதி டிவிட் செய்துள்ளார். ஆனால், 8 ஆம் தேதி மாலை வரை ஏலப் பட்டி யலில் தமிழ்நாட்டு பகுதிகள் இடம் பெற்றுள்ளது; நீக்கப்படவில்லை. பாஜகவுக்கு எனது கேள்வி? காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லமாக சட்டப்படி அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது ஒன்றிய அரசுக்கு தெரியாதா? மாநில அரசாங் கங்களை கலந்தாலோசிக்காமல் இப்படிப்பட்ட திட்டங்களை அறிவிப்பது கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது என்பது தெரியாதா? தமிழ்நாட்டு விவ சாயிகள் நலனில் எப்போதுமே அக்கறை கொண்ட வர் பிரதமர் என்றால், தமிழ்நாட்டு விவசாயிகள் நலனை காப்பதற்காகத்தான் அறிவிக்கப்பட்டதா? முதலாளிகள் நலனில் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர் நமது பிரதமர் என்பதுதானே உலகம றிந்த செய்தி. இந்த நிலக்கரி சுரங்கமும் ஏதாவது ஒரு பெரு முதலாளிக்கு வழங்கப்படும் என்பது தானே உண்மை.
லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்து. உணவுப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு அறிவிக்குமாம். அண்ணா மலை கேட்டவுடன் அவர்கள் ரத்து செய்து விடு வார்களாம். கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு மதி எங்கே போயிற்று என்ற பழ மொழி தான் நினைவுக்கு வருகிறது. மக்களுக்கு விரோதமான எத்தனையோ சட்டங்களையும், திட்டங்களையும் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. அவற்றையெல்லாம் ரத்து செய்யுமாறு ஏன் அண்ணாமலை கேட்க வில்லை. அரசியல் சுய லாபத்திற்காக அண்ணா மலையும், மத்திய அமைச்சரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது. இந்த நாடகத்தை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகை தரும் அன்று திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறார். இந்த அரங்கேற்றத் திற்கு தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பு தான் அடிப்படை காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் தொடர் பான ஏலம் ரத்து செய்யப்படுகிறது என்று நிலக்கரி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். ஏலப் பட்டியலில் இருந்து தமிழ்நாடு பகுதிகள் நீக்கப்பட வேண்டும். அதுவரை தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தமிழ்நாட்டிற்கான ஆபத்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை பாதுகாக்க ஒன்றுபட்ட கூட்டு போராட்டம் அவசியம். நிலம், நீர், உணவு, வேலை இவற்றை பாதுகாக்க விழிப்புடன் இருப்போம். நெற்களஞ்சியத்தை காக்க கரம் கோர்ப்போம். அண்ணாமலைகளின் தகிடு தத் தங்களை அம்பலப்படுத்துவோம்.