எல்.இளைய பெருமாளுக்கு நினைவு அரங்கம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு
சென்னை, ஏப்.18- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எல். இளையபெருமாள் அவர்கள் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக இளவயதிலிருந்தே தொடர் போராட்டங்களையும் செயல்பாடுகளையும் காத்திரமாக முன்னெ டுத்தவர். பட்டியலின மக்கள் மீது திணிக்கப் பட்டிருந்த பறை அடிப்பது, இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துவது, வெட்டியான் வேலை போன்ற இழிவான வேலைகளை ஒழிப்பதற்காக அயராது பாடு பட்டவர். பட்டியலின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைமை களை ஆய்வு செய்ய முதன்முதலில் நியமிக்கப்பட்ட தேசிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர். நாடு முழுவதும் இடைவிடாது பயணம் செய்து ‘தீண்டாமை, வன் கொடுமைகளுக்கு எதிராகவும் பட்டியல் இனமக்களின் பொருளா தாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்காகவும் விரிவான ஆய்வுகளை செய்து அறிக்கைகளை சமர்ப்பித்தவர்.
“பன்முகத்தன்மை கொண்ட உலகம் எழுமிடம்” தென் அமெரிக்கா குறித்து லாவ்ரோவ்
பிரேசிலியா, ஏப்.18- உக்ரைனுடனான சச்சரவு இன்னும் நிறைவு பெறாத நிலையில், தென் அமெரிக்க நாடுகளுக்கு ஐந்து நாள் பயணமாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வந்துள்ளார். ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் அவரது பயணம் நடைபெற உள்ளது. முதலில் பிரேசிலின் தலைநகர் பிரேசிலியாவுக்கு வந்துள்ளார். அங்கு, பிரேசிலின் வெளியுறவுத்துறை அமைச்சர் மவுரோ வியர்ராவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேசியிருக்கிறார். வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், எரிசக்தி, பாதுகாப்பு, பண்பாடு மற்றும் கல்வி ஆகிய துறைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தார்கள். இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையிலான சண்டை குறித்தும் ஆய்வு செய்தனர். இதில், “உடனடியாக சண்டை நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தை மூலமாக அமைதிக்கான தீர்வை எட்ட வேண்டும்” என்ற கருத்தை பிரேசில் தரப்பில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். பிரேசில் பயணத்தை நிறைவு செய்தபிறகு, வெனிசுலா, நிகரகுவா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கும் லாவ்ரோவ் பயணம் செய்யவிருக்கிறார். இந்தப் பயணம் குறித்துக் கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர், “லத்தீன் அமெரிக்கா ரஷ்யாவுடன் நட்போடு இருக்கக்கூடிய பகுதியாகும். பன்முகத்தன்மை தோன்றக்கூடிய இடங்களில் தென் அமெரிக்காவும் ஒன்றாகும்” என்று குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது, தன்னிச்சையானது!
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
புதுதில்லி, ஏப்.18- தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயக சீர்திருத்தங்க ளுக்கான சங்கம்’ (ADR) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணைய உறுப்பினர்களை நியமிப்பார் என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இதன்படி தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் நியமனத்துக்காக நடுநிலையான சார்புத்தன்மையற்ற குழுவை அமைக்க வேண்டும்; ஆனால், ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் தங்களது சொந்த நலனைக் கருத்தில் கொண்டு தேர்வு முறைகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த 2022 நவம்பர் 19- அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அருண் கோயலைத் தேர்தல் ஆணையராக நியமித்தது, நியாயமற்றது. இது ஆணையத்தின் நேர்மை மற்றும் தன்னாட்சி அதிகாரத்தை மீறுவதாக உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிக்கும் பணியானது, நடுநிலையான மற்றும் சுதந்திர மான குழுவை அமைத்து, அதனிடம் ஒப்படைக்கப்படு வதற்கு உத்தரவிட வேண்டும்’’ என்று ஜனநாயக சீர்திருத் தங்களுக்கான சங்கம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.
சித்த மருத்துவ பல்கலை. மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!
சென்னை, ஏப்.18- சித்த மருத்துவ பல் கலைக்கழக மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி திருப்பி அனுப்பிய தாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேர வையில் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளு நர் திருப்பி அனுப்பிய நிலை யில், மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு ஆளுநருக்கு மசோதா அனுப்பப்பட்டது. இந்நிலையில், இரண்டா வது முறையாக அனுப்பப் பட்ட மசோதாவிற்கும் சில விளக்கம் கேட்டு தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பி யுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப் பேரவையில் தெரிவித்தார். மேலும், உரிய விளக்கத் துடன் மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும் என்று அமைச்சர் கூறினார்.
பேரவையில் இன்று
காலை: சுற்றுலா- கலை பண்பாடு, இந்து சமய அறநிலையங்கள். மாலை: திட்டம், வளர்ச்சி, சட்டமன்றம், ஆளுநர், மனிதவளம்.