states

சோனியாவை தரக்குறைவாக விமர்சித்த கர்நாடகா பாஜக எம்எல்ஏ

புதுதில்லி.ஏப்.28- கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ, சோனியா காந்தியை ‘விஷப் பெண்’என்றும், பாகிஸ்தான், சீன உளவாளி என்றும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் என்பவர் சோனியா காந்தியை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். விஜயபுரா தொகுதியில் போட்டியிடும் இவர், கொப்பல் மாவட்டம் யெல்புர்கா பகுதியில் ஏப்ரல் 28 அன்று நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் பேசுகையில், சோனியா காந்தி நாட்டை அழித்து, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் உளவாளியாக வேலை பார்த்தார். மோடியின் அரசை கவிழ்க்க மணி சங்கர அய்யர் பாகிஸ்தான், சீனாவிடம் உதவி கோரினார்.  பிரதமர் மோடி குறித்து கார்கே பேசியதை பாஜகவினர்  எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்றார். காங்கிரஸ் கண்டனம் பாஜக எம்எல்ஏவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது டிவிட்டரில், “ஒவ்வொரு தேர்தலின் போதும், அவர்கள் சோனியா காந்தி குறித்து புதிய அவதூறு பரப்பி அவமதிக்கின்றனர். தனது வாழ்நாள் முழுமையும் கண்ணியத்துடனும் கருணையுடனும் அவர் வாழ்ந்து வருகிறார். எங்கள் தலைவருக்கு எதிராக பாஜக அவமானகரமான மொழிகளில் பேசி தன்னைத் தாழ்த்திக் கொள்கிறது.

மோடி ஜி நீங்கள் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “கர்நாடகா  சட்டப்பேரவைத் தேர்தலில் முழு தோல்வியை தழுவ உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தொடர்ந்து அவமதிக்கும் வார்த்தைகளையும் சேற்றையும் வாரி வீசுகின்றனர். இதனால் காங்கிரஸ் தலைவர்களை அவமதிக்கும் அவர்களுடைய அழுக்கான மனநிலையை தொடர்ந்து வெளிப்படுத்துகிறது. பாஜக தலைவர்களும், பிரதமர் மோடியும் நேரு குடும்பத்தினை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்.பிரதமர் மோடியே கடந்த காலத்தில் சோனியா காந்தியை ‘காங்கிரஸ் கி வித்வா’ ‘ஜெர்சி மாடு’ என தரம் தாழ்த்தி விமர்சித்திருக்கிறார். பிரதமர் மோடியின் குணாதிசயமும் கண்ணியமும் இன்று சோதனைக்குள்ளாகியுள்ளது. அவருக்கு கண்ணியம் இருக்குமானால், அவர் உடனடியாக பசனகவுடா பாட்டீல் யத்னாலை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். யத்னாலை பாஜகவிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் நட்டாவிற்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.