நியூயார்க், ஜூன் 15- உக்ரைனில் உள்ள ககோவ்கா அணை உடைப்பால் உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட சோவியத் காலத்து மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை ஜூன் 6 அன்று உடைந்தது. இந்த அணை உடைந்ததற்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டிய நிலையில், அணையிலிருந்து வெளியேறிய 18 சதுர கி.மீ. பரப்பளவு தண்ணீர், தென் உக்ரைன் பகுதியை புரட்டியெடுத்தது. இந்நிலையில், ககோவ்கா அணை உடைப்பின் தாக்கம் குறித்து ஐநா சபையின் உதவி பிரிவுக்கான தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறியதாவது: “ககோவ்கா அணை மீதான தாக்குதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு, உணவுப் பொருட்களின் விலை உயர்வும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்சனைகளும் ஏற்படலாம். கோதுமை, பார்லி, சோளம், ராப்சீட் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கின்றன. ககோவ்கா அணை உடைப்பின் காரணமாக வரும் காலங்களில் மேற்குறிப்பிட்ட பயிர்களை விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும். முக்கியமாக சுமார் 7 லட்சம் பேர் வரை குடிநீருக்காக அணைக்கு பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கின்றனர். இந்த உடைப்பின் காரணமாக சுத்தமான குடிநீர் இல்லாமல் மக்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்பும், குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பும் ஏற்படும். ஜெனீவா உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு எதிரான வகையிலும், குடிமை உள்கட்டமைப்புக்கு எதிராகவும் ககோவ்கா அணை பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. அணை உடைப்பிற்கு யார் காரணமாக இருந்தாலும் ஜெனீவா உடன்படிக்கைகளை மீறியதாகும்” என கிரிபித்ஸ் கூறினார்.