ஜெயலலிதா அம்மையாரின் 75 ஆவது பிறந்தநாள் விழா எடப்பாடியார் அணிக்கு கொண்டாட்டமாகவும், ஓபிஎஸ் அணிக்கு திண்டாட்டமாகவும் அமைந்துள் ளது. வியாழனன்று தீர்ப்பு வந்தவுடனேயே எடப்பாடியார் கட்அவுட்டுக்கு பாலா பிஷேகம் நடந்துள்ளது. எந்த காலில் விழுவது என்று தெரியாமல் திகைத்து நின்ற சில அதிமுகவினர், கிடைத்தது கால் என்று மகிழ்ந்து எடப்பாடியாரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துள்ளனர். அவரும் ஏற்கெனவே பலமுறை விழுந்த அனுபவத்தில் மகிழ்ச்சி பொங்க இந்த மரியாதையை ஏற்றிருக்கிறார். மறுபுறத்தில் தர்மயுத்தம் நடத்திய அதே ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஓபிஎஸ், உடன் வந்த ஒரு சிலருக்கு வேண்டா வெறுப்பாக லட்டு விநி யோகம் செய்துவிட்டு இறுகிய முகத்துடன் சென்று விட்டார். நேற்றைக்கு தில்லியி லிருந்து தரப்பட்ட அல்வாவின் கசப்பை அவரால் தின்று செரிக்க முடியவில்லை.
கூவத்தூர் பாணியில் கட்சி பொதுக்குழு வையும் குத்தகைக்கு எடுத்து நடத்திய ஜூலை 11 கூட்டம் செல்லும் என உச்சநீதி மன்றமே சொல்லி விட்டதால் மகிழ்ச்சி யடைந்த எடப்பாடியார், தீர்ப்பு என்னவாக இருக்குமோ என்று எண்ணி எனக்கு தூக்கமே வரவில்லை. இப்போது தீர்ப்பு வந்துவிட்டது. பாண்டவர்கள் வென்று விட்டார்கள். கௌரவர்கள் தோற்று விட்டார்கள் தர்மம் வென்றது என கூறியுள்ளார். இவர்கள் ஒருவரையொருவர் கௌரவர், பாண்டவர் என்று கூறிக்கொண்டா லும் சதுரங்க பலகையில் சதியாட்டம் நடத்தும் சகுனி நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார். யாருக்கு தலை, யாருக்கு பூ என்பதை நானே தீர்மானிக்கிறேன். இரண்டு தலையையும் இல்லாமல் செய்வதே இந்த தாமரைப் பூவின் நோக்கம் என்பதே அந்தச் சிரிப்பின் உட்பொருள். குடிகெடுக்கும் குருமூர்த்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தர்மயுத்தம் நடத்தி கடைசியில் நிராயுதபாணியாக நிறுத்தப்பட்டுள்ள ஓபிஎஸ் தரப்பு, தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அசடு வழிந்துள்ளார். தொண்டர்கள் யார் பக்கம் என்பதை தொண்டர்கள்தானே தீர்மானிக்க வேண்டும். மக்கள் எப்படி தீர்மானிக்க முடியும். அடிக்கடி ஓபிஎஸ் உச்சரிக்கும் வார்த்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் என் பின்னால் நிற்கிறார்கள் என்பதுதான். தீர்ப்பு வந்தவுடன் திரும்பி பார்த்தார் ஒன்றிரண்டு பேரைத்தவிர ஒருவரையும் காணவில்லை என்ற விரக்தி அவருக்கு.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுக்குழு வை நடத்தி வேட்பாளர் யார்? என முடிவு செய்யுமாறு நீதிமன்றம் கூறியது. நேரில் கூட்ட முடியவில்லை என்றால் தபாலில் அல்லது ஆன்லைனில் கருத்துக் கேட்குமா றும் இலவச ஆலோசனை வழங்கப்பட்டது. இதன்படி மாற்று வேட்பாளரையே சொல்லா மல் தென்னரசு பெயரை மட்டும் சொல்லி நடத்தப்பட்ட தேர்தலில் அவரே வேட்பாள ராக தீர்மானிக்கப்பட்டுள்ளார் என தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக அவருக்கு இரட்டைஇலையை வழங்கியது தேர்தல் ஆணையம். பல வழக்குகள் நீண்ட காலமாய் நிலுவையில் கிடக்கும் நிலையில் இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டதற்கும் இடைத்தேர்த லுக்கும் சம்பந்தம் இல்லை என நம்ப இயன்ற வரை முயற்சிப்போம். பாஜகவுடன் நெருக்கமாக இருந்த சிவசேனை கட்சியை சின்னாபின்னமாக்கி உத்தவ் தாக்கரேயின் முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவை பயன்படுத்தி பறித்தது பாஜக. கட்சியை உடைத்த ஷிண்டேவை முதல்வராக்கியதோடு, அந்தக் கட்சி தான் உண்மையான சிவசேனா என்றும், வில் அம்பு சின்னம் ஷிண்டே கோஷ்டிக்கே என்றும் தேர்தல் ஆணையம் சொன்னதும் சட்டப்படிதான் என்று நம்புவது அவரவர் இஷ்டம்.
இப்படி பல கட்சிகளை ஏப்பம் விட்டு செரித்த அனுபவம் பாஜகவுக்கு உண்டு. கூட்டணியிலிருந்த நிதிஷ்குமாருக்கு எதிராக ராம்விலாஸ் பஸ்வானின் மகனை தூண்டிவிட்டு விளையாடியது பாஜக. இப்போது பஸ்வான் கட்சி பஷ்பமாகி விட்டது. இவர்களது சதியை புரிந்துகொண்ட நிதிஷ்குமார் கூட்டணியிலிருந்து விலகி ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் முதல்வ ராக தொடருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் அனைத்து ஆட்டங்களையும் பாஜகவே தீர்மானிக்கிறது. இரண்டு கோஷ்டி யாக பிரித்ததும் அவர்கள்தான். பிறகு அப்போதைய ஆளுநர் மூலம் இரு கோஷ்டி யையும் இணைத்ததும் அவர்கள்தான். அதிமுக ஆட்சி முடிந்தபிறகு மீண்டும் பிரித்து மோதவிடுவதும் பாஜகதான். எடப் பாடியார், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் ஒரு நேரத்தில் ஒரு சேர இயக்கிய டி.டி.வி. தினகரன் அதிமுகவை இயக்குவது தில்லி தான் என்று கூறியிருப்பதே இதற்குசான்று. பாஜக உறவும் பாம்பின் நிழலும் ஒன்றுதான். இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணியும் ஒருவரையொருவர் கடித்து குதறிக் கொண்டாலும் பாஜகவின் பாதார விந்தங்களின் பணிந்து தொழுவதில் அபூர்வ ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இப்போதும் கூட ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத கொள்கைகளுக்கும் இரண்டு கைகளையும் தூக்கி ஆதரவு தெரிவிக்கின்றனர்.
யார் சிறந்த விசுவாசி என்று பாஜக நடத்திய ஓட்டப்பந்தயத்தில் இப்போதைக்கு எடப்பாடி தரப்பு முந்தியுள்ளது. ஆனால் பாஜக இத்துடன் விட்டுவிடாது. தன்னுடைய விசுவாசியான ஓபிஎஸ் மூலம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கவே முயலும். தர்மம் வென்றது; நீதி வென்றது என்றெல்லாம் துள்ளிக் குதிக்கும் எடப்பாடியார், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகள் நனவாக உயிர்மூச்சு உள்ள வரை பாடுபடுவேன் என பெருமூச்சு விட்டுள் ளார். பாஜகவுடன் சேர்ந்தது நான் செய்த மிகப் பெரிய தவறு. அந்த தவறை இனி ஒருபோதும் செய்யமாட்டேன் என்று தான் ஜெயலலிதா சொன்னார். பாஜக வின் தயவில் கட்சி நடத்தும் எடப்பாடியார் எப்படி ஜெயலலிதாவின் கனவை நனவாக்கு வார். மோடியா, இந்த லேடியா என்பதுதான் அவர் கடைசியாக எழுப்பிய கேள்வி. இப்போது மோடி வலையில் சிக்கியுள்ள இபிஎஸ் எப்படி அந்த லேடியின் கனவை நனவாக்குவார். மொத்தத்தில் கொக்கு வாயில் சிக்கிய மீனின் கதையாக மாறிவிட்டது அதிமுக. எந்தளவுக்கு பாஜகவிடமிருந்து அதிமுக விலகி நிற்கிறதோ அந்தளவுக்கு அந்தக் கட்சிக்கு நல்லது.