சென்னை, டிச. 26- 46வது சென்னை புத்தக காட்சி வரும் 6 ஆம்தேதி தொடங்குகிறது.ஜன.22 வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சிக்காக 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இது குறித்து புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் (பபாசி) சங்கத் தலைவர் எஸ்.வைரவன், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் அ.குமரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியை ஜனவரி 6ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு துவக்கி வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்குகிறார். புத்தக காட்சியில் தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஒன்றிய அரசின் சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களும் பங்கு பெறுகின்றன.
உரைவீச்சு, நூல் வெளியீடு
பன்னாட்டில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தினசரி மாலை தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள், நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. புத்தகக் காட்சி அமைக்க 1500 பேர் விண்ணப்பித்திருந்தனர். போதுமான இடவசதி இல்லாததால் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிய மினி அரங்குகளும், திருநங்கைகள் பதிப்பகத்திற்கு என சிறப்பு அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.
வெளிநாடு பதிப்பாளர்கள்
தமிழக அரசின் ஆதரவுடன் ஜனவரி 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் அதே வளாகத்தில் சென்னை சர்வதேச புத்தகக் காட்சியும் நடைபெறுகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். நிறைவு நாளன்று (ஜன. 22) நீதிபதி மகாதேவன் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது துணைத் தலைவர் மயிலவேலன், இணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் நந்தகி ஷோர், சிராஜூதீன் (பாரதி புத்தகாலயம்) ஆகியோர் உடனிருந்தனர்.