எதிர்க்கட்சிகள் கண்டனம்
புதுதில்லி, ஆக. 11 - தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில், நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் முறையான சட்டம் இயற்றப்படும் வரை, அவர்களைத் தேர்வு செய்வதற்கான பிரதமர் தலைமை யிலான குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறியிருந்தது. இதனிடையே, ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ‘தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா 2023’-ஐ, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வியாழனன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில், பிரதமர் தலைமையிலான 3 பேர் குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை மோடி அரசு புறக்கணித்திருந்தது.
இது தற்போது நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ‘தேர்தல் ஆணையத்தை பிரதமரின் கைப்பாவையாக செயல்பட வைப்பதற்கான வெளிப்படையான முயற்சி இது. அரசியல் சாசனத்துக்கு எதிரான, நியாயமற்ற மசோதா. அனைத்து அமைப்புகளிலும் இதை எதிர்ப்போம்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார். “தங்களுக்கு விருப்பமில்லாத உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்படுவதே ஒன்றிய அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை பாதிக்கும்” என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தற்போது வைத்திருப்பதுபோல தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்தில் இந்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளனர்’ என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
2012-இல் அத்வானி எழுதிய கடிதமும்..
2023-இல் மோடி அரசு செய்த கபளீகரமும்..!
சுதந்திரமான தேர்தல் ஆணைய செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று 2012-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி, அப்போதைய பாஜக நாடாளு மன்றக் கட்சித் தலைவரான எல்.கே. அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தேர்தல் ஆணைய உறுப்பினர் களைத் தேர்ந்தெடுக்க கொலீஜியம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அத்வானி வலியுறுத்தினார். “பிரதமரின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவரால் தேர்தல் ஆணைக் குழு உறுப்பினர்களை நியமிக்கும் தற்போதைய அமைப்பு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை” என்றும் அவர் கூறினார். “பாரபட்சம் அல்லது வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மை இல்லாமை போன்ற தோற்றம் இருக்கும் நிலையில், அதனை அகற்றுவதற்காக, தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அந்தஸ்து பெற்ற அமைப்புகளுக்கான நியமனங்கள் இருதரப்பு அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது.
நிர்வாகத்தின் தரத்தை பெரிதும் தீர்மானிக்கும் இந்த முக்கியமான அமைப்புகளில் திறமை, நேர்மை மற்றும் பாவம் செய்ய முடியாத சேவைப் பதிவு ஆகியவற்றைக் கொண்ட நபர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதை இந்திய மக்கள் பார்க்க விரும்புகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அத்வானியின் கட்சியான பாஜக-வும், அதன் பிரதமரான மோடியும் தற்போது ஆட்சியதிகாரத்தில் இருக்கும் நிலையில், தங்களின் கைப்பாவைகளை தேர்தல் ஆணையர்களாக நியமிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பையே காலில் போட்டு மிதித்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தேர்தல் ஆணை யர்களில் ஒருவரான அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற இருக்கிறார். அவருடைய பணியிடம் அப்போது காலியாகும். தேர்தல் நேரம் என்பதால், தங்களுக்கு வேண்டியவர்கள் தேர்தல் ஆணையத்தில் இருப்பதே நல்லது என்று பாஜக கணக்கு போடுகிறது. அதற்கு தடை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, குழுவில் இடம்பெறாதவாறு சட்டத்தையே மாற்றியமைக்க துணிந்துள்ளனர்.