states

img

நிபா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தாக்குதலுக்குப் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை உஷார் நிலையில் செயல்பட்டு வருகிறது. தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான வாளையார், கன்னியாகுமரி, தேனி போன்ற இடங்களில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தையொட்டி இருக்கும் தமிழக கேரளா எல்லை பகுதிகளில் சுகாதாரத் துறையினர் இன்று காலை முதல் கண்காணிப்பை 
தீவிரப்படுத்தியுள்ளனர். வாளையார் சோதனை சாவடியில் முழு கவச உடை அணிந்த தமிழக சுகாதாரத் துறை ஊழியர்கள், பேருந்து மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்து வருபவர்களுக்குக் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கின்றனர். கேரளாவிலிருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் 13 வழித்தடங்களிலும் சுகாதாரத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் வருபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தற்பொழுது ஐந்தாவது முறையாக நிபா வைரஸ் காய்ச்சலில் தாக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.