states

பள்ளிக்கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பதவி பாமக வலியுறுத்தல்

சென்னை,மே 16- பள்ளிக்கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பதவி ஏற்படுத்தப்படவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-  பள்ளிக்கல்வித்துறையில் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற பல குழப்பங்களுக்கு, ஆணையரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். இனியும் அத்தகைய குழப்பங்கள் நடக்கக்கூடாது. அதை உறுதி செய்வதற்காக பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை  நீக்கி விட்டு, பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியை மீண்டும்  கொண்டு வர வேண்டும். பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குநருக்கு வழங்கப்பட வேண்டும். அந்த இடத்தில் அனுபவம் உள்ள நேர்மை யான அதிகாரி அமர்த்தப்பட வேண்டும். பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதவியும் காலியாகி உள்ளது.  கடந்த 8 மாதங்களாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முழு நேரத் தலைவர் இல்லாததால் வாரியம் முடங்கிக் கிடக்கிறது.  எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உடனடியாக முழுநேரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.