மதுரை, டிச. 15- கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரத்தின் 1986 இல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை முறையாக செயல்படுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த செலஸ்டின் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொது நல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “1982ஆம் ஆண்டு கன்னியாகுமரி, மண்டைக்காடு பகுதியில் மத கலவரம் ஏற்பட்டது. இந்த மத கலவரத்தை அப்போது இருந்த மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்தினர். இதன் பின்பு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், நீதிபதி வேணுகோபால் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார். நீதிபதி வேணுகோபால் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையின்படி இனி இதுபோன்ற கலவரங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக தமிழக அரசு 1986 இல் அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணையின்படி கன்னியாகுமரி மாவட்டத்தை நிரந்தரமாக அமைதியான மாவட்டமாக மாற்றவும், மத நல்லிணக்கத்தை பின்பற்றவும், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முன்னேற்றம் ஆகியவை இடம்பெற்று இருந்தது.இந்த அரசாணை பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட போது இது குறித்து தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டது. 1986 இல் அரசாணையை முறையாக செயல்படுத்த கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே, 1986 இல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை முறையாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.” என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு வியாழனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக உள்துறைச் செயலர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.