states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மணிரத்னம் பிறந்தநாள் : முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, ஜூன் 2- தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான  மணிரத்னத்திற்கு வெள்ளியன்று (ஜூன் 2) பிறந்த நாளாகும்.  இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். 

விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா?

சென்னை, ஜூன் 2- 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  கடந்த மாதம் 8ஆம் தேதி வெளியானது. தேர்வு முடிவுக ளுக்கு பிறகு, தேர்வு எழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்தனர். இதன் மூலம் விடைத்தாள்களை பெற்ற மாணவர்கள் மூலமாக விடைத்தாள்கள் மதிப்பீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை விட கூடுதல்  மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் கூடுதலாக 5 முதல் 7 மதிப்பெண்கள் வரை அதிகமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது கல்வித்துறையில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை ஒவ்வொரு மதிப்பெண்களும் வேளாண்மை, கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி படிப்புகள் சேர்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே  இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தேர்வுத்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 2- தமிழ்நாட்டில் வரும் 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 3 முதல் 6  வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல்  41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.