states

மீன்பிடி தடைக்கால நிவாரணம் மாற்றுத்திறனாளி மீனவர்களுக்கு வழங்கிடுக

சென்னை, ஜூன் 27-   மீன்பிடி தடைக்கால நிவாரணம் மாற்றுத்திறனாளி மீனவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மனு அனுப்பியுள்ளது.  சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநிலப் பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பிய மனு வருமாறு: அரசு நிறைவேற்றும் சமூகநலன் மற்றும் வறுமை ஒழிப்பு திட்ட ஒதுக்கீடு களில் மற்றவர்களுக்கு வழங்குவதைவிட 25 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016 கூறுகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளாக உள்ள மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் தமிழகம் முழுவதும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களைச் சார்ந்த குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஜூலை மாதம் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் மட்டுமல்ல, நவம்பர் மாதம் வழங்கப்படும் மாநில அரசின் மற்றொரு திட்டமான மழைக்கால நிவாரணம் ரூ.6 ஆயிரம் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் தேசிய மீனவர் சேமிப்பு நிவாரண திட்ட தொகை ரூ.4,500- இவைகள் மாற்றுத்திறனாளி மீனவர்களுக்கு மறுக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை யை இதற்கு காரணமாகக் காட்டி அதிகாரிகள் விதிகளை உருவாக்கியுள்ள தாகக் கூறப்படுகிறது. இது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்திற்கு விரோதமானது. எனவே, தமிழக முதலமைச்சர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலை யிட்டு, அரசு வழங்கும் அனைத்து நிவாரணங்களையும் மாற்றுத்திறனாளி மீனவர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் சட்டப்படி 25 சதவீதம் கூடுதலாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.