சென்னை, மார்ச் 9- ஆளுநர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது அவர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ தொடரில் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு:-
உங்களுடைய எழுபதாவது பிறந்த நாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த பரிசு எது?
உங்களில் ஒருவனான என்னைத் தலைவ ராகத் தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததைவிட பெரிய பரிசு இருக்க முடியுமா?
உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டு மானால் என்ன சொல்வீர்கள்?
‘தோள் கொடுப்பான் தோழன்’ என்பதன் அடையாளம் அவர்கள்!
ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத் தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ள தே… ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்கு செவிமடுப்பார்கள் என நினைக் கிறீர்களா?
இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த் தால், ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது.
மறைமுகமல்ல பாஜகவின் மிரட்டல் பாணி
தில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையா கவே மிரட்டுகிறது பாஜக என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே பயன் படுத்துகிறார்கள். தில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைது கண்டிக்கத் தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக் கூடாது.
2 இடங்களை மட்டுமே பாஜக வென்றது
வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவு கள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?
தேர்தல் வியூகங்களின் மூலமாக வெற்றி பெற்றுள்ளது பாஜக. திரிபுராவில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை திப்ரா மோத்தா கட்சி பிரித்து விட்ட காரணமாக காங்கிரஸ் - இடதுசாரிகள் அணி தோல்வியைத் தழுவி பாஜகவை வெற்றி பெற வைத்துவிட்டார்கள்! நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக வெற்றி பெற்றிருக்கிறார்கள்! கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. திரிபுரா, நாகாலாந்து பற்றிப் பேசுகிறவர்கள் ஏன் மேகாலயா பற்றி பேசுவது இல்லை? அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 59 தொகுதியிலும் போட்டி யிட்ட பாஜக, இரண்டே இரண்டு இடங்களில் தான் வென்றது. பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் கட்சிக்குத் தனது ஆதரவை வழங்கி யதன் மூலமாக ஆளும்கட்சியாக தன்னை மேகாலயாவில் காட்டிக் கொள்கிறது பாஜக. இந்த மாதிரியான பிம்பங்களைக் கட்டமைத்து, தாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை போல காட்டிக் கொள்கிறார்கள். '
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறதே?
இந்தியாவை வளர்த்துள்ளோம்... வளர்த்துள் ளோம் என்று பா.ஜ.க சொல்வது எது தெரியுமா? 2014-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஒரு சிலிண்டரின் விலை 414 ரூபாய். இப்போது ஒரு சிலிண்டரின் விலை 1,118 ரூபாய் 50 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 72 ரூபாய் 26 பைசா. இப்போது விலை 102 ரூபாய் 63 பைசா. ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் 55 ரூபாய் 49 பைசா. இப்போது விலை 94 ரூபாய் 24 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒன்றிய அரசுக்கு இருந்த கடன் 54 லட்சம் கோடி ரூபாய். இப்போது இருக்கும் கடன் 147 லட்சம் கோடி ரூபாய். அதாவது மூன்று மடங்கு அதிகம்! இதுதான் பா.ஜ.க.வால் இந்தியா அடைந்த வளர்ச்சி!
கீழடி அருங்காட்சியகத்தை நீங்கள் திறந்து வைத்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறதே?
நேரில் சென்று பாருங்கள், இன்னும் பிரமிப்பாக இருக்கும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இருந்து, கீழடிக்காகத் தொடர்ந்து சட்டமன்றத்தில் - மக்கள் மன்றத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். எங்களுடைய தொடர் வற்புறுத்தலால்தான், அகழாய்வுப் பணியே நடந்தது. அங்கு அருங்காட்சியகம் அமையுங்கள் என்று தொடர் கோரிக்கை வைத்தேன். வெறும் அடிக்கல் மட்டும் நாட்டிவிட்டு, எந்த பணியையும் செய்யா மல் இருந்தார்கள். நாம் ஆட்சிக்கு வந்தவுடன்தான், அந்தப் பணியை விரைவுபடுத்தி, இப்போது முடித்திருக் கிறோம். அந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்துப் பார்க்க தொடங்கியதும், என்னால் நகரவே முடியவில்லை. ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுபோல இருந்தது. 2600 ஆண்டுகளுக்கு முன்னால், கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன வெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதைக் கண்டுபிடித்து, சேகரித்து நமது அரசு காட்சிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் நின்று ஆர்வத்தால், selfid (தாமி) எடுத்துக்கொண்டேன். எத்தகைய நாகரீகமும், பண்பாடும் கொண்டவர்களாகத் தமிழர்கள் இருந்தார்கள் என்பதை அறியும்போது பெருமையாக இருந்தது. அருங்காட்சியகம், காணொலி, தொடுதிரை, 3D எனத் தொழில்நுட்பத்தோடு அமைக்கப் பட்டிருக்கிறது. பொதுமக்கள் தங்களது பெயரினைத் தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். அனைவரும் நேரில் சென்று பாருங்கள். உலகத் தமிழர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கீழடி வந்து பாருங்கள். இதே போல் நெல்லை யில் பொருநை அருங்காட்சியகமும் தயாராகி வருகிறது என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.